திருத்துறைப்பூண்டி அருகே அரசு பேருந்தில் ஆபாசமாக பேசிகொண்டும் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டும் வந்த மாணவர்களை தட்டிகேட்ட அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்கிய விவகாரத்தில் மேலும் இரண்டு அரசு கல்லூரி மாணவர்கள்  கைது செய்யப்பட்டனர்.

 

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக பள்ளி கல்லூரி மாணவர்கள் மதுவிற்கு அடிமையாகி அடிதடி தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையில் மாணவர்களிடையே மோதல், பேருந்தில் பயணிக்கும் பொழுது படியில் நின்று கொண்டு பிரச்சனையில் ஈடுபடுதல் அதனை கேட்கும் நபர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுதல், சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் இதே போன்று பிரச்சனைகள் தொடர்ந்த வண்ணம் இருந்து வருகிறது. காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த பின்னரும் மாணவர்கள் இதே போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்கள் தகாத வார்த்தையால் பேசிக் கொண்டும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும் இருந்த போது அதனை தட்டிக் கேட்ட அரசு பேருந்து நடத்துனர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அரசு பேருந்து நடத்துனர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு அரசு பேருந்தை ஓட்டுனர் மகேந்திரன் என்பவர் நேற்று முன்தினம் மாலை இயக்கி வந்துள்ளார். புதிய பேருந்துநிலையத்தில் ஏறிய தண்டலச்சேரி அரசு உறுப்பு கலை கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் தங்களுக்குள் வாக்குவாதம் பண்ணிகொண்டும் ஆபாசமாக பேசிகொண்டும் வந்துள்ளனர். இது மற்ற பயணிகளுக்கு இடையூறாக இருந்துள்ளது. இந்நிலையில் தண்டலைச்சேரி பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்த போது பேருந்தின் உள்ளே இருந்த கல்லூரி மாணவர்கள் சிலர் தகாத வார்த்தையால் சத்தம் போட்டு வந்துள்ளனர். இதனை பேருந்து நடத்துனர் பக்கிரிசாமி (51) இதனை  கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர்கள் பேருந்தில் இருந்து நடத்துனரை கீழே தள்ளிவிட்டு தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்து நடத்துனர் பக்கிரிசாமி மண்டை உடைந்தது. இதில் அவர் அங்கேயே மயங்கினார். உடனடியாக அருகில் இருந்த சக பயணிகள் நடத்துனரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். 



 

இந்த நிலையில் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய தண்டலைச்சேரி பாரதிதாசன் அரசு உறுப்பு கலை கல்லூரியைச் சேர்ந்த பி ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர் சுர்ஜித் சிங் பர்னாலா மற்றும் பிஏ தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவர் முருகதாஸ் ஆகிய இருவரையும் நேற்று திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதே கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மணிகண்டன் மற்றும் பிரியதரன் இருவரையும் திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் கைது செய்து உள்ளனர் இதுவரை இந்த சம்பவத்தில் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை நேரடியாக பார்த்த பயணிகள் கூறுகையில், மதுபோதையில் மாணவர்கள் மிக ஒழுங்கின செயலில் ஈடுபட்டனர். குறிப்பாக பெண்கள் அதிகளவில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது தகாத வார்த்தைகளால் பேசிக் கொள்ளுதலும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு பெண்கள் மீது விழுந்ததும் நாகரிகமற்ற செயலாக கருதப்படுகிறது என்றனர்.