வட்டாட்சியர் அலுவலகங்களில் பரபரப்பு... வரும் 4ம் தேதி தொடங்கும் ஜமாபந்தி!
"வருவாய்த் தீர்வாயம் என்கிற ஜமாபந்தி ஜூன் 4 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் தீர்வாயம் என்கிற ஜமாபந்தி வரும் ஜூன் 4ம் தேதி தொடங்கப்படவுள்ளது என்று மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1435}ஆம் பசலிக்கான "வருவாய்த் தீர்வாயம் என்கிற ஜமாபந்தி ஜூன் 4 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது.
வட்டங்களான பேராவூரணியில் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஜூன் 4 முதல் 10ம் தேதி வரையும், பாபநாசத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஜூன் 4 முதல் 12 ஆம் தேதி வரையும், தஞ்சாவூரில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் ஜூன் 4 முதல் 12ம் தேதி வரையும், ஒரத்தநாட்டில் தஞ்சாவூர் உதவி ஆணையர் (கலால்) தலைமையில் ஜூன் 4 முதல் 12 ஆம் தேதி வரையும், பூதலூரில் தஞ்சாவூர் கோட்டாட்சியர் தலைமையில் ஜூன் 4 முதல் 10 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.
இதேபோல, பட்டுக்கோட்டையில் தனித்துணை ஆட்சியர் (முத்திரைக் கட்டணம்) தலைமையில் ஜூன் 4 முதல் 19 ஆம் தேதி வரையும், திருவையாறில் மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் ஜூன் 4 முதல் 9 ஆம் தேதி வரையும், திருவிடைமருதூரில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையில் ஜூன் 4 முதல் 11 ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.
மேலும் கும்பகோணத்தில் கும்பகோணம் கோட்டாட்சியர் தலைமையில் ஜூன் 4 முதல் 11 ஆம் தேதி வரையும், திருவோணத்தில் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் தலைமையில் ஜூன் 4 முதல் 10 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் நில உடைமையாளர்கள் பட்டா மாறுதல் மற்றும் நிலங்கள் குறித்த எல்லை பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல் குறித்தும், பொதுமக்கள் வீட்டுமனை ஒப்படை, நில ஒப்படை மற்றும் முதியோர் உதவித்தொகை பெறுதல் போன்ற கோரிக்கைகள் குறித்தும் ஜமாபந்தி அலுவலர்களிடம் மனுக்கள் கொடுத்து தீர்வு பெறலாம்.
நிறைவு நாளில் அந்தந்த வட்டங்களில் வருவாய்த் தீர்வாய அலுவலர்களிடம் விவசாயிகள் நீர் வளத் துறை, வேளாண் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண் பொறியியல் துறை, புள்ளியியல் துறை சார்ந்த உட்கோட்ட அலுவலர்கள் அடங்கிய கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில், பாசனம் தொடர்பான கருத்துரு, முன்மொழிவுகள், கோரிக்கைகள் ஆகியவற்றை அளிக்கலாம்.
தற்போதைய தலைமுறை, 'ஸ்மார்ட் போன்' மூலமாகவே, அனைத்து சான்றிதழ்களையும் விண்ணப்பித்து பெற்றுவிடுகிறது. இவ்வளவு ஏன்? ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் எவ்வளவு எளிதாக மாறியுள்ளது. இப்படியான தருணத்தில், சமபந்தி விருந்து நடப்பது போல், 'ஜமாபந்தி' என்றால், ஏதோ தாலுகா அலுவலகத்தில் நடக்கும் விருந்தோ என்று கூட, இளம் தலைமுறையினர் நினைக்கலாம்.
வருவாய்த்துறை என்பது, நாட்டின் நிர்வாகத்துறையாக விளங்குகிறது. அன்றைய காலத்தில், விவசாயிகளிடம் நிலவரி வசூல் செய்யவும், விளைச்சலுக்கு ஏற்ற வரிவசூல் செய்வது மட்டுமே, வருவாயாக இருந்தது. நிலவரி வசூல் மட்டுமே, வருவாய்த்துறையின் பணியாக இருந்தது. நாளடைவில், நில பதிவேடு பராமரிப்பு, இறப்பு - பிறப்பு பதிவேடு பராமரிப்பு, சான்றிதழ் வழங்குவது, நலத்திட்ட உதவி வழங்குவது என மாற்றம்பெற்றது. வருவாய்த்துறையில், வருவாய் கிராமம், உள்வட்டம்(பிர்கா), தாலுகா, கோட்டம், மாவட்டம் என்று, பல அடுக்காக இயங்குகிறது.
கிராம நிர்வாக அளவிலும், நில வருவாய் ஆய்வாளர், தாலுகா அலுவலக அளவில், 24 வகையான பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன. பசலி ஆண்டு எனப்படும், விளைச்சலை கணக்கிடும், ஜூலை - ஜூன் வரையிலான விளைச்சல் கணக்கிடப்படுகிறது. அவற்றை சரிபார்த்து தணிக்கை செய்து ஒப்புதல் அளிக்க, ஜமாபந்தி நடத்தப்படுகிறது.
வருவாய் தீர்வாயம் என்று பெயர் வைத்திருந்தாலும், 'ஜமாபந்தி' என்பதே பரிச்சையமான பெயராக இருக்கிறது. கிராம நிர்வாக அலுவலரின் அனைத்து பதிவேடுகளை சரிபார்த்து, ஜமாபந்தி அலுவலர் ஒப்புதல் அளிக்கிறார். அந்தகாலத்தில், அனைத்து அரசு அலுவலர்களையும், ஜமாபந்தில் மட்டுமே, ஒரேநாளில் பார்க்க முடியும்.
ட்ரெண்டிங் செய்திகள்





















