பித்ரு தோஷம் நீக்கும் புனிதத் தலம்... ஆவூர் பசுபதீஸ்வரர் கோயிலின் அதிசயம்!
இத்தலம் ஒரு பஞ்ச பைரவத் தலம் என்ற சிறப்பைப் பெற்றது. மகா மண்டபத்தில் மேற்கு நோக்கு 4 பைரவ மூர்த்திகளும், வடக்கு நோக்கி ஒரு பைரவ மூர்த்தியும் சுயம்புவாக அமைந்த திருக்கோலத்தை நாம் தரிசிக்கலாம்.

தஞ்சாவூர்: பித்ரு தோஷ பரிகாரத் தலமாக விளங்கும் கும்பகோணம் அருகே உள்ள ஆவூர் பசுபதீஸ்வரர் கோயில். பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 21-வது தலமாக இருப்பது ஆவூர் பசுபதீச்சரம். இத்தலத்தின் சிறப்பு, இங்குள்ள பஞ்ச பைரவர்கள் சன்னதி.
இங்குள்ள இறைவன் பசுபதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். இறைவி மங்களாம்பிகை, பங்கஜவல்லி என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. இக்கோயில் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கோயில் தல வரலாறு
ஒருசமயம், ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலிமையானவர் என்று போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப் பற்றிக்கொள்ள, வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேஷன் தன்பிடியைச் சிறிது தளர்த்தினார். இதுதான் தக்க சமயம் என்று எண்ணிய வாயு, இரு சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டுவந்து, தென்னாட்டில் ஒன்றை ஆவூரிலும், மற்றொன்றை அருகிலுள்ள திருநல்லூரிலும் விடுவித்தான் என்று தல புராணம் தெரிவிக்கிறது.
வசிஷ்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரம்மாவின் அறிவுரைப்படி உலகுக்கு வந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டு தன் சாபம் நீங்கப் பெற்ற தலம். ஆ (பசு) வழிபட்டதால் இத்தலம் ஆவூர் என்று பெயர் பெற்றது. காமதேனு இவ்வுலகுக்கு முதலில் வந்தடைந்த கோவிந்தகுடி என்ற இடம் அருகில் உள்ளது. கோயிலின் கொடிமரத்தில், சிவலிங்கத்தின் மீது பசு பால் சொரிந்து வழிபடும் சிற்பம் உள்ளது.
மாடக்கோயில்களில் இக்கோயிலும் ஒன்று
கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களில் ஆவூர் பசுபதீஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். 5 நிலை ராஜகோபுரத்துடன் இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன், கிழக்கு வெளிப் பிராகாரத்தில் உள்ள கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். இறைவன் சந்நிதி ஒரு கட்டுமலை மீது அமைந்துள்ளது. இறைவன் கருவறை விமானம், மணிக்கூடம் என்று அழைக்கப்படுகிறது.
தெற்கு வெளிப் பிராகாரத்தில் உள்ள படிகள் மூலம் ஏறி இறைவன் குடிகொண்டுள்ள கட்டுமலையை அடையலாம். கட்டுமலை ஏறி உள்ளே நுழைந்தால் மகா மண்டபம், அர்த்த மண்டபம், அதையடுத்து கருவறையில் மூலவர் பசுபதீஸ்வரர், சுயம்பு லிங்கத் திருமேனி உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மகா மண்டபத்தில் வடபுறம் தெற்கு நோக்கி மங்களாம்பிகை, பங்கஜவல்லி என இரண்டு அம்பாள் சந்நிதிகள் அமைந்துள்ளன. இதில் மங்களாம்பிகை, குளத்தில் இருந்து எடுத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.
பங்கஜவல்லி அம்மன் மிகவும் பழமையானது. சம்பந்தர் தனது தேவாரப் பதிகத்தில் 3-வது பாடலில் பங்கய மங்கை விரும்பும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடுநாவே என்று குறிப்பிட்டிருந்தாலும், இத்தலத்தில் சிறப்பு வாய்ந்த சந்நிதி மங்களாம்பிகை அம்பாள் சந்நிதியே.
இத்தலம் ஒரு பஞ்ச பைரவத் தலம் என்ற சிறப்பைப் பெற்றது. மகா மண்டபத்தில் மேற்கு நோக்கு 4 பைரவ மூர்த்திகளும், வடக்கு நோக்கி ஒரு பைரவ மூர்த்தியும் சுயம்புவாக அமைந்த திருக்கோலத்தை நாம் தரிசிக்கலாம். பைரவ மூர்த்தி வழிபாடு இங்கு மிகவும் சிறப்புடையதாகும். அஷ்டமி திதியன்று கூட்டு எண்ணெய்யால் விளக்கேற்றி இங்குள்ள பைரவர்களை வழிபாடு செய்துவந்தால், பித்ரு தோஷம் நீங்கி வாழ்வில் வளம் ஏற்படும். மேலும் பில்லி, சூன்யம், ஏவல் மற்றும் செய்வினையால் ஏற்படும் சகலவித கோளாறுகளும் நீங்கும். மரண பயம், வாகன விபத்து அபாயம் நீங்கும், பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கி நல்ல முறையில் சேர்ந்து வாழ்வர்.
இந்த ஐந்து பைரவர்கள் அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், கால பைரவர் மற்றும் உன்மத்த பைரவர் எனப்படுவர். இத்தலத்தில், தசரதர் தனக்குப் புத்திரன் பிறக்க வேண்டும் என்று சிவபெருமானை வழிபட்டுள்ளார். தசரதர் ஈசனை வழிபடும் சிற்பத்தை பங்கஜவல்லி அம்பாள் சந்நிதியின் கிழக்குச் சுவற்றில் காணலாம். சப்த மாதர்களின் திருஉருவங்களும் உள் பிராகாரத்தில் உள்ளன. நவக்கிரக சந்நிதியும் இங்கு உள்ளது. இத்தல முருகன், வில்லேந்திய வேலனாகக் காட்சியளிக்கிறார். வள்ளி தெய்வானையுடன் வில்லேந்தி காட்சி தரும் முருகனின் சந்நிதி, மேற்கு வெளிப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இத்தலத்தில் உள்ள முருகன், தனுசு சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். தர்மத்வஜன் என்ற அரசன், இத்தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி தனது குஷ்டநோய் நீங்கப் பெற்றான் என்று தல வரலாறு குறிப்பிடுகிறது. தலவிருட்சமாக அரச மரமும், தீர்த்தங்களாக பிரம்ம தீர்த்தம், காமதேனு தீர்த்தம் ஆகியவை உள்ளன. காமதேனு தீர்த்தம் வழக்கில் தேனு தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது. பிரம்மா, சப்தரிஷிகள், தேவர்கள், இந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், வசிஷ்டர், மகாவிஷ்ணு, தசரதர் ஆகியோர் வழிபட்ட தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கும்பகோணத்தில் இருந்து கோவிந்தகுடி, மெலட்டூர் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் கோவிந்தகுடியை அடுத்து ஆவூர் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பட்டீஸ்வரத்தில் இருந்து தெற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















