தஞ்சையில் ராஜராஜ சோழன் சதய விழா: 1040-வது ஆண்டு கொண்டாட்டம்! சிலிர்ப்பில் பக்தர்கள்
தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் 1040- வது சதய விழா நேற்று முன்தினம் காலை துவங்கியது. தொடர்ந்து கருத்தரங்கம், கவியரங்கம், பரதநாட்டியம், பட்டிமன்றம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1040 வது சதய விழா நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. அரண்மனை வளாகத்தில் இருந்து கலைஞர்கள் ஊர்வலமாக பெரிய கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்து 2ம் நாளான இன்று ராஜராஜ சோழன் சிலைக்கு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் 1040-வது சதயவிழாவை முன்னிட்டு நேற்று அரண்மனை வளாகத்தில் இருந்து ராஜராஜ சோழன் போல் வேடமிட்டவர் சாரட் வண்டியில் அமைச்சர்கள், காவலர்கள் போன்று வேடமிட்டவர்களுடன், நாட்டுப்புற கலை நிகழ்ச்சியுடன் நகர் வலம் வந்து பெரிய கோயிலை அடைந்தார். அங்கு 400 பரத நாட்டிய கலைஞர்களின் புஷ்பாஞ்சலி நடந்தது. பின்னர் கவியரங்கம், கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
2ம் நாளான இன்று அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உலகமே வியக்கும் அளவுக்கு தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் 1040- வது சதய விழா நேற்று முன்தினம் காலை துவங்கியது. தொடர்ந்து கருத்தரங்கம், கவியரங்கம், பரதநாட்டியம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதையடுத்து சதய விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை திருக்கோயிலில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. பின்னர், திருமுறை நூல்களை அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து 100க்கும் அதிகமான ஓதுவாமூர்த்திகளுடன் கோயிலிருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதிகளில் வீதியுலா நடைபெற்றது.
தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில், கோயிலுக்கு வெளியே உள்ள ராஜராஜசோழன் சிலைக்கு தஞ்சாவூர் எம்பி ச.முரசொலி, மாவட்ட ஆட்சியர் மா. பிரியங்கா பங்கஜம், மேயர் சண்.ராமநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம், அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள், சதய விழா குழு தலைவர் து.செல்வம், அறநிலையத்துறை உதவி ஆணையர் கோ.கவிதா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கத்தினர், தமிழ் அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 48 வகையான மங்களப் பொருட்களால் பேரபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.
பின்னர் மாலை 6.30 மணிக்கு பெரியநாயகி மற்றும் பெருவுடையார், மாமன்னன் ராஜராஜசோழன், பட்டத்தரசி லோகமாதேவி, ராஜேந்திர சோழனின் உற்சவ மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து கருத்தரங்கம், மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறிநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானம், இந்து சமய அறநிலையத்துறையினர் இணைந்து செந்திருந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்க பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் வந்தால் பெரிய கோயில் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. காலை முதல் மாலை வரை ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.





















