தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூரில் பாகவத மேளா நாட்டிய நாடக தொடக்க விழா நடந்தது.


தஞ்சை மாவட்டம் மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டம் மெலட்டூர் என்று சொன்னாலே பாகவத மேளா மட்டும்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அதுவே அந்த ஊரின் அடையாளமாக ஆகியிருக்கிறது. பாகவத மேளா என்பது பழமையான நாட்டிய நாடக வகையைச் சேர்ந்தது. விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் சரிவுக்குப் பிறகு ஆந்திரத்திலிருந்து 16-ம் நூற்றாண்டில் தஞ்சாவூருக்கு வந்த 500-க்கும் மேற்பட்டோர் இங்கேயே உருவாக்கி வளர்த்தெடுத்த கலை. 


இதில் தமிழ் மண்ணின் தொல்கலையின் தடங்களைக் காணலாம். தஞ்சாவூருக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், கவிஞர்கள். அப்போது தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்கர் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு, மாடுகள், நிலங்கள் கொடுக்கப்பட்டன. மெலட்டூரில் பல கலைஞர்கள், அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். பரதம் காசிநாதையா, பரதம் வீரபத்ரய்யா என்று பலரையும் சொல்லலாம்.


தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த பாகவதமேளா என்கிற நாட்டிய நாடகம் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாகவத மேளா நாடகவிழா ஸ்ரீ லெக்ஷ்மி நரசிம்மர் ஆலய வளாகத்தில் லெட்சார்ச்சனையுடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறும்.


இவ்விழாவில் பிரகலாதா சரித்திரம், ஹரிசந்திரா, வள்ளி திருமணம் போன்ற நாட்டிய நாடகங்கள் நடைபெற உள்ளன. தினமும் இரவு துவங்கும் பாகவத மேளா நாடகங்கள் அதிகாலை வரை நடை பெறும். 


இந்த நாடகங்களில் ஆண்களே, பெண்கள் வேடம் தரித்து நடிப்பர். இந்நாடக நடிகர்கள் தொழில்முறை நாடகக் கலைஞர்கள் அல்ல. இவர்கள் அனைவரும் வங்கி, தனியார் நிறுவனம், சாப்ட்வேர் கம்பெனி என பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளாக இந்தியா முழுவதும் பல இடங்களில் பணிபுரிந்து வரும் இவர்கள் மெலட்டூர் உள்ளுர் வாசிகள்.


மேலும் குடும்பம் வழிவழியாக தந்தை, மகன் என தொடர்ந்து நடித்து இந்த நாடகங்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கின்றனர். தெய்வீகம், இசை, நாட்டிய மரபுகள் நிறைந்த பாகவத மேளா பழமை மாறாமல் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக மெலட்டூரில் நடத்தப்பட்டு வருகிறது. பாகவத மேளா நாடக விழா முதல் நாளன்று இரவு பிரகலாதா சரித்திரம் எனும் நாட்டிய நாடகம் நடைபெற்றது.


துவக்கவிழா நிகழ்ச்சியில் அமெரிக்காவை சேர்ந்த தீனாபாபு, பரதநாட்டிய கலைஞர் அனிதா குஹா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் சி.கே.கரியாலி உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் இயக்குனர் எஸ்.குமார் செய்திருந்தார்.