ஆர்ப்பாட்டங்களால் அதிர்ந்த தஞ்சாவூர்: ஒருபுறம் விவசாயிகள், மறுபுறம் டாஸ்மாக் ஊழியர்கள்
தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு வங்கிகளில் பெற்ற அனைத்து பயிர் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். நகைக்கடனையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்

தஞ்சாவூர்: பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக விவசாய சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமாரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட செயலாளர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு வங்கிகளில் பெற்ற அனைத்து பயிர் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். நகைக்கடனையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் உர விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் மாநில துணைத்தலைவர் சுகுமாரன் நிருபர்களிடம் கூறுகையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்போருக்கு 50 சதவீத கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவித்தது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நகைக்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

மேலும் உர விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தடுக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றார். விவசாயிகளின் இந்த ஆர்ப்பாட்டத்தால் கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட டாஸ்மார்க் கடை பணியாளர்கள் இன்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் தமிழ்நாடு மாநில வாணிப கழக மாவட்ட மேலாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு தஞ்சை மாவட்ட டாஸ்மார்க் கடை பணியாளர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது டெண்டர் எடுத்தவர்கள் மூலம் காலி பாட்டில்கள் திரும்ப பெற வேண்டும்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். அதேபோல் டாஸ்மாக் கடைகளில் மின்கட்டணம், கடை வாடகை கட்டணம் அனைத்தையும் அரசே ஏற்க வேண்டும். இந்த காலி பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம், மின்சார கட்டணம், காலி பாட்டில்களை வைக்கும் கட்டடத்திற்கு வாடகை என ஒரு மாதத்திற்கு சுமார் ரூ. 1.50 லட்சத்திற்கு மேல் செலவாகிறது. அதனை அரசு ஏற்று நடத்த வேண்டும்.
தற்போது தவெக ஆட்சியில் அடையாளம் தெரியாதவர்கள் நாங்கள் தவெக நிர்வாகி என சொல்லிக்கொண்டு டாஸ்மாக் கடைகளை வீடியோ எடுத்து கூடுதலாக பணம் பெறப்படுகிறது என அட்டூழியம் செய்து வருகிறார்கள். இதனால் டாஸ்மாக் பணியாளர்கள் கடைகளில் வேலை செய்வதில் இடர்பாடுகள் ஏற்படுகிறது. இவர்களால் டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களை திரும்ப பணிக்கு வர ஆணை வழங்க வேண்டும். அவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 136 டாஸ்மாக் கடைகளும் இன்று அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Before You Go
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்





















