‘யாருக்கும் இதுபோல் நடக்கக்கூடாது’ இறந்த தாயின் காலில் விழுந்து பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவி
அம்மா திடீரென நெஞ்சுவலியில் இறந்து விட, உள்ளுக்குள் சோகம், குமுறி வரும் அழுகையுடன் தாயின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவி.

தஞ்சாவூர்: சுனாமி, புயல், நிலநடுக்கம் என அனைத்தும் ஒரே சேர ஏற்பட்டால்... அதுபோல் பற்றி படரும் கொடிக்கு பந்தல் போல் குடும்பத்திற்கு அஸ்திவாரமாய் இருந்த அம்மா திடீரென நெஞ்சுவலியில் இறந்து விட, உள்ளுக்குள் சோகம், குமுறி வரும் அழுகையுடன் தாயின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவியை பார்த்து ஊரே கலங்கி நின்ற சம்பவம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் நடந்துள்ளது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த வெட்டுவாக்கோட்டை கிராமம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கலா. இவர்களின் மூன்றாவது மகள் காவியா (17). இவர் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு (பயோ மேக்ஸ் குரூப்) படித்து வருகிறார். தற்போது 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் காவியாவின் அம்மா கலா இன்று அதிகாலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் தற்போது அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவி காவியாவிற்கு இன்று (பயாலஜி) உயிரியல் தேர்வு தொடங்க இருந்த நிலையில் காவியாவிற்கு அம்மா கலா மரணம் மிகப் பெரிய சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட காவியா தன் தாய் இறந்த நிலையில் இன்று காலை உயிரியல் தேர்வு எழுதுவதற்கு ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புறப்பட்டார். தேர்வு எழுத செல்வதற்கு முன்பு இறந்த தனது தாய் கலாவின் காலில் கதறி அழுதபடியே விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இதைப் பார்த்த அருகிலிருந்த கலாவின் உறவினர்களும் கதறி அழுதனர்.
அதனைத் தொடர்ந்து காவியாவை அவரது உறவினர் பைக்கில் பள்ளிக்கு அழைத்து வந்தார். பள்ளிக்கு வந்த மாணவி காவியாவை பார்த்து அவரது சக தோழிகளும் கட்டியணைத்து கதறி அழுதனர். இதுகுறித்து மாணவி காவியா அழுதபடியே கூறுகையில், நான் ஒவ்வொரு முறையும் தேர்வெழுத செல்லும்போது என் அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவேன். அப்போது அவர்கள் எனக்கு திருநீறு எடுத்து பூசி நீ நன்றாக தேர்வு எழுத வேண்டும் என்று சொல்வார்கள். தேர்வு எழுதிவிட்டு வந்தபிறகு எப்படி நீ தேர்வு எழுதியிருக்கிறாய். படிப்பு முக்கியம், நன்றாக படிக்க வேண்டும் என்று கூறுவார்கள்.

இன்று எனது அம்மா இறந்து விட்டார்கள். எனக்கு படிப்பு முக்கியம் என்பதால் நான் இன்று தேர்வு எழுத வந்துள்ளேன் என்று அழுதபடியே கூறினார். காவியாவின் அப்பா ராஜேந்திரன் மனவளர்ச்சி குன்றியவர். காவியாவிற்கு காயத்ரி என்ற அக்காவும், திருச்செல்வம் என்ற அண்ணனும் உள்ளனர். திருச்செல்வம் கல்லூரியில் இரண்டாமாண்டு பி.ஏ படித்து வருகிறார்.

காயத்ரிக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்து நேற்றுதான் காயத்ரிக்கு தாலிபிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடந்தது என்பதும் குறிப்பிட்டத்தக்கது. அந்த குடும்பத்தின் வாழ்வாதாரமே இறந்துபோன கலா தான். அவரும் இறந்து விட்டதால் இந்த குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு உதவி செய்ய வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் அண்ணன், தங்கச்சியின் மேற்படிப்புக்கு அரசு உதவ வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.





















