உச்சி வெயிலில் உணவை தேடி உண்ணும் ஆடுகள்... மழை பெய்ததால் பரவலாக வளர்ந்த புற்கள்
தற்போது தஞ்சை அருகே பூதலூர், சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, ஆலக்குடி, சிவகாமிபுரம் பகுதிகளில் ஆட்டுக்கிடை போடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வயல்களில் புற்கள் வளர்ந்துள்ளன. இதனால் ஆட்டுக்கிடை அமைத்துள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் உச்சி வெயிலிலும் உணவை தேடி அலையாமல் ஆடுகள் வயல்களில் மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் சித்திரக்குடி, ஆலக்குடி, சிவகாமிபுரம் உட்பட பல இடங்களில் அறுவடை முடிந்த வயல்களில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆட்டுக்கிடை போட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சித்திரக்குடி, ஆலக்குடி, பூதலூர் உட்பட சுற்றுப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் வயல்களில் புல், பூண்டு செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் ஆடு, மாடுகள் மட்டுமின்றி கொக்கு, நாரைகளும் வயல்களில் உணவை தேடி உண்டு வருகின்றன.
தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை குறுவை, சம்பா, தாளடி மற்றும் உளுந்து, பயறு சாகுபடி என்று தொடர்ந்து நடக்கும். பின்னர் கோடை உழவும் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படும். இதில் கோடை உழவை தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, சிவகாமிபுரம், 8 நம்பர் கரம்பை பகுதியில் அதிகளவு விவசாயிகள் மேற்கொள்வதில்லை.
காரணம் வயலை காற்றாடப் போட்டு வைத்து மண் வளத்தை மேம்படுத்துவர். இதனால் அடுத்த சாகுபடி பயிர்களுக்கு இயற்கையான மண் சத்துக்கள் கிடைக்கும் என்பதால்தான். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி செய்த பிறகு ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை மூன்று மாதங்களுக்கு வயலில் எந்த சாகுபடியும் செய்யாமல் அப்படியே விட்டு விடுவர்.
இந்த காலக்கட்டடத்தில் இதுபோன்ற வயல்களில் புற்கள் முளைத்து வளரும். அப்போது வயல்களில் வெள்ளாட்டு ஆட்டு மந்தைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இதற்கு ஆட்டு கிடை போடுவது என்று பெயர். மண் வளத்தை உயர்த்தும் என்பதால் ஆட்டு கிடை போடுபவர்களுக்கு விவசாயிகள் ஆதரவு அளித்து வருகின்றனர். இப்படி ஆட்டுக்கிடை போடுபவர்கள் இரவு நேரத்தில் வயல்களில் பட்டி போடுகிறார்கள். ஆடுகள் வெளியே செல்லாத வகையில் வட்டமாக வலை விரித்து, அதனுள்ளே ஆடுகளை அடைத்து விடுகின்றனர்.
ஆடுகளின் சிறுநீரும், புழுக்கைகளும் வயலுக்கு இயற்கை உரமாக கிடைக்கும். அடுத்த சாகுபடிப் பணிகள் தொடங்கும் வரை இங்கேயே தங்கிவிடுகிறார்கள். அந்த வகையில் தற்போது தஞ்சை அருகே பூதலூர், சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, ஆலக்குடி, சிவகாமிபுரம் பகுதிகளில் ஆட்டுக்கிடை போடப்பட்டுள்ளது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வெள்ளாடுகளை பட்டி அமைத்து வயல்களில் மேய்ச்சல் காட்டி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது. மேலும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ததால் ஆட்டுக்கிடை போட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் இந்த மழையால் வயல்களில் புல், பூண்டுகள் நிறைய வளர்ந்துள்ளது. இதனால் வெள்ளாடுகளுக்கு உணவு தடையின்றி கிடைத்து வருகிறது. மேலும் கொக்குகள், நாரைகளும் வயல்களில் இறங்கி புழு, பூச்சிகளை பிடித்து உண்ணுகின்றன.
அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆன நிலையிலும் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்துள்ளது. இதனால் மதிய வேளையில் மட்டும் வெயில் கொளுத்துகிறது. இருப்பினும் வயல்களில் புல், பூண்டுகள் அதிகம் வளர்ந்துள்ளதால் ஆடுகளை வெயிலையும் பொருட்படுத்தாமல் மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.




















