தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சித்திரக்குடியில் மண்ணில் புதைந்திருந்த சோழர் காலத்து நந்தி மற்றும் விஷ்ணு சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  


கள ஆய்வு மேற்கொண்டனர்


தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே அமைந்துள்ளது சித்திரக்குடி‌. இந்த ஊரை சார்ந்த சத்யா என்பவர் தங்களுடைய நிலத்தில் நந்திசிலை ஒன்று பாதி புதைந்த நிலையில் இருப்பதாக அளித்த தகவலின் அடிப்படையில், தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன், பொந்தியாகுளம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன், அரசு நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜெயலெட்சுமி ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். 


சிலைகள் குறித்து அவர்கள் தெரிவித்ததாவது: சித்திரக்குடியின் வடபகுதியில் வெண்ணாறு பாய்கிறது. தென்புறம் புதிய கல்லணைக் கால்வாய் அமைந்திருப்பினும், இந்த ஊருக்கு நீர்வளம் சேர்ப்பது கச்சமங்கலம் தடுப்பணையில் இருந்து பிரிந்து வரக்கூடிய ஆனந்தகாவிரி வாய்க்காலே ஆகும். கச்சமங்கலம், மாரனேரி, வெண்டயம்பட்டி போன்ற ஊர்களில் பல்லவர் காலக்கல்வெட்டுகள் காணப்படுகின்றது.


சோழர் காலத்தை சேர்ந்த சிலை


கி.பி. 7-ம் நூற்றாண்டில் பல்லவர்களுக்குட்பட்ட முத்தரையர் ஆட்சி செந்தலை எனும் ஊரினைத் தலைமையிடமாகக் கொண்டு நடைபெற்றது. அப்போது இப்பகுதி பல்லவர்கள் ஆட்சிப்பகுதியாகத் திகழ்ந்தது. பின்னர் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் பாண்டி குலாசனி வளநாட்டு ஏரியூர் நாட்டிற்கு உட்பட்ட பகுதியாகத் திகழ்ந்தது.


சித்திரக்குடியில் லிங்கத்தடிமேடு என்று அழைக்கப்படும் வயல்வெளியில் பாதி உடல் பூமிக்குள் மறைந்த நிலையில் ஒரு நந்தி சிலை இருப்பதைக் காண முடிந்தது. இந்த நந்தியானது கி.பி. 910-ம் நூற்றாண்டினை, அதாவது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலத்தைச் சார்ந்ததாக காணப்படுகின்றது. இந்த நந்தியின் கழுத்தில் மணிமாலை சிறப்பாக வடிவமைக்கப் பெற்றுள்ளது. திமில் இப்பகுதியிலிருக்கும் காளைக்கு உள்ளது போலவே இருக்கிறது.




தலை மற்றும் ஒரு கை உடைந்த நிலையில் விஷ்ணு சிலை


மேலும், அங்கிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் செல்லக்கூடிய ஆனந்தகாவிரி வாய்க்காலின் உட்புறத்து தென்புறக்கரையினை ஒட்டியவாறு தலை மற்றும் ஒரு கை உடைந்த நிலையில், இடுப்புக்குக்கீழாக வாய்க்கால் கரையில் பாதி புதைந்த நிலையில் சுமார் 3 அடி உயரமுள்ள விஷ்ணு சிலை கண்டறியப்பட்டது. இவை இரண்டும் சோழர்கள் காலத்திய சிலைகளாகும்.


பெரிய சிவன் கோயில்


இங்கே ஒரு பெரும் சிவன் கோவில் இருந்து முற்றிலுமாக அழிந்து போயிருக்கக்கூடும். பிற்காலத்தில் இந்த இடத்திற்குச் சற்று அருகில் கோவில் ஒன்று எழுப்பப் பெற்றுள்ளது. இக்கோவிலின் உள்ளே நுழைந்ததும் முன்பகுதியில் கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவர் கால நந்தி ஒன்று உள்ளது. இந்த நந்தியின் அடி பீடத்தில் பல்லவர் கல்வெட்டு இரண்டு வரி உள்ளது. அதில் ஸ்ரீஏரனக்கன் மங்கல வைருதன் செய்வித்தது என்ற எழுத்துப் பொறிப்பு காணப்படுகிறது.


பல்லவர் கால எழுத்து பொறிப்பு


தஞ்சை மாவட்டத்தில் பல்லவர் கால எழுத்துப் பொறிப்புடன் இருந்து முதன்முதலாகக் கண்டறியப் பெற்றுள்ளது சிறப்பாகும். இவற்றுள் புதிதாக நந்தியுடன் காணப்படும் பல்லவர் கல்வெட்டுச் செய்தியும், சோழர் காலத்திய பாதி புதையுண்டுள்ள நந்தியும், விஷ்ணுவும் புதியதாகக் கண்டறிய முடிந்தது. இக்கோவில் வளாகத்தில் அச்சுதப்பநாயக்கர் கால கல்வெட்டு ஒன்றும், பிற்காலத்திய கல் வெட்டு ஒன்றும் உள்ளது.


மேற்கண்ட இரண்டு கல்வெட்டுச் செய்திகளும் மத்திய கல்வெட்டு ஆண்டறிக்கையில் வெளிவந்துள்ளது. இந்த ஊர் சோழர்கள் காலத்தில் சிறந்து விளங்கியது. சோழர்களுக்கு முன் ஆட்சி செய்த பல்லவர்கள் காலத்திலும் முக்கியப் பகுதியாக இருந்திருப்பதை அறிய முடிகின்றது என்றனர்.