தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காவிரி கரையில் உள்ள பகவத் படித்துறையில் இருந்த ஆக்கிரமிப்புகளை கோவில் அதிகாரிகள் அதிரடியாக அகற்றி பூட்டி சீல் வைத்தனர்.


பகவத் படித்துறை மண்டபம்


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாலக்கரை பகுதியில் பகவத் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள  நாகேஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான பகவத்படித்துறை மண்டபம் காவிரி ஆற்றின் கரையில் உள்ளது.


அமாவாசை காலங்களில் தர்ப்பணம்


கரையில் ஆடி அமாவாசை உள்ளிட்ட அமாவாசை காலங்களில் இறந்த தங்களது முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அமாவாசை காலங்களில் இந்த படித்துறை பொதுமக்களால் நிரம்பி வழியும்.  இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சிவானந்தம் என்னும் நபர் படித்துறை பகுதியை ஆக்கிரமித்து மண்டபத்தின் மின்சாரத்தை உரிய அனுமதியின்றி பயன்படுத்தி வந்துள்ளார்.




ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி


மேலும் அவர் அந்த பகுதியில் வைத்திருந்த பொருட்கள் தர்பணம் கொடுக்க வருபவர்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வந்துள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்திற்கும், இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்திற்கு தொடர்ந்து பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் அளித்த வண்ணம் இருந்தனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிடில் போராட்டம் நடத்தப்படும் என்றும் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஐகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு


இதையடுத்து ஆக்கிரமிப்பு புகார் குறித்து கோவில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் ஆக்கிரமிப்பை செய்திருந்த சிவானந்தம் மதுரை ஐக்கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து நாகேஸ்வரன் கோவில் செயல் அலுவலர் கணேஷ்குமார், ஆய்வாளர் வெங்கடசுப்பிரமணியன் மற்றும் 10-க்கும் மேற்பட்ட கோவில் பணியாளர்கள், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் மண்டபத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த பகுதிகளை மீட்டு, மின்சாரத்தை துண்டித்தனர்.


மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை மண்டபத்தின் வெளியில் வைத்து விட்டு வெளிப்புற கதவை பூட்டி சீல் வைத்தனர். கோர்ட் உத்தரவை கோவில் அதிகாரிகளின் உடனடியாக மேற்கொண்டு அதிரடி நடவடிக்கை எடுத்ததற்காக பொதுமக்கள் தரப்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.