தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
இந்தாண்டு குறுவை சாகுபடியை கைவிடுவது தவிர வேறு வழியில்லை என்று வலியுடன் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.மேட்டூர் அணையில் நீர்மட்டம் போதிய அளவில் இருக்க வேண்டும்.

தஞ்சாவூர்: ஆண்டுதோறும் வழக்கமாக ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் அதே நம்பிக்கையில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான ஆயத்தப்பணிகளை ஆவலுடன் தொடங்கினர்.
ஆனால், தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், குறிப்பிட்ட தேதியில் அணை திறக்கப்பட வாய்ப்பில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. இதனால் இந்தாண்டு குறுவை சாகுபடியை கைவிடுவது தவிர வேறு வழியில்லை என்று வலியுடன் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட வேண்டுமெனில், அணையின் நீர்மட்டம் போதிய அளவில் இருக்க வேண்டும். ஆனால் அணையின் நீர் இருப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போதைய நீர் இருப்பைக் கொண்டு அணையத் திறந்தால், அது பாசனத் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யாது என்பதால் அணை திறப்பு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக மே மாதம் 2வது வாரத்திலேயே உழவுப் பணிகள், நாற்று விடுதல் போன்ற பணிகளில் தீவிரமாக இறங்கும் விவசாயிகள், இந்த ஆண்டு பருவமழை கைகொடுக்கும் மற்றும் அணை வழக்கம்போல் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் பணிகளைத் தொடங்கினர். ஆனால் தற்போதைய நிலையில் எல் நினோ பாதிப்பால் பருவமழை தாமதமாகி உள்ளது.
இதுகுறித்து டெல்டா பகுதி விவசாயிகள் தரப்பில் கூறுகையில், இதனால், இந்த ஆண்டு குறுவை சாகுபடியைத் தொடங்க முடியாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் கவலையிலும், பெருத்த ஏமாற்றத்திலும் மூழ்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இருந்த சாதனை நெல் உற்பத்தி நிலை மாறி, நடப்பாண்டில் ஒரேயொரு போக சம்பா சாகுபடியாவது செய்ய வாய்ப்பு இருக்குமா என்ற சோகமான சூழல் உருவாகியுள்ளது.
2020-ஆம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளில் (2023 தவிர) அணை சரியான நேரத்தில் திறக்கப்பட்டது. இதனால் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடியும் வெற்றிகரமாக அமைந்து, நெல் உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்தது. கடந்த 2024-இல் நீர் இருப்பு குறைவால் ஜூலை 28-க்கு அணை திறப்பு தள்ளிப்போனாலும், 2025-ல் உரிய காலத்தில் திறக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், நடப்பாண்டு மீண்டும் நிலைமை மோசமாகி எங்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தி வருகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதியை எதிர்பார்த்துதான் எங்களது வாழ்வாதாரமே தொடங்குகிறது. இந்த ஆண்டும் நம்பி சாகுபடி பணிகளில் இறங்கினோம். ஆனால், தற்போது அணை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பம்ப் செட் பாசன வசதி உள்ள விவசாயிகள் குறைந்த அளவில்தான் உள்ளனர். அதிகளவு ஆற்று நீர் பாசனத்தை நம்பியே இருக்கிறோம். அதனால் எங்களால் முழுமையாகக் குறுவை சாகுபடியைக் மேற்கொள்ள இயலாது. போதிய தண்ணீர் இல்லாமல் போனால், நடப்பாண்டு குறுவை சாகுபடியைக் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
அணை திறக்கப்படாவிட்டால் பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, கர்நாடக அரசிடமிருந்து தமிழகத்திற்குத் தர வேண்டிய உரிய தண்ணீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தடி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்பவர்களுக்கு மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்கப்பட வேண்டும் என்றும் விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்யாவிட்டால், இந்த ஆண்டின் குறுவை சாகுபடி முற்றிலும் கேள்விக்குறியாகி, விவசாயிகளின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்






















