தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் 1420 ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மழை நீடித்தால் இளம் நாற்றுகள் அழுகும் அபாயம் ஏற்படும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.



வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதில் இன்று காலை முதல் சாரல் மழையாக பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் தாழ்வான இடங்களில் நெற் பயிர்கள் மூழ்கியுள்ளன. மழை தொடர்ந்து பெய்து வருவதால் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் வடிய முடியாத நிலை உள்ளது.





தஞ்சை மாவட்டத்தில் தற்போது வரை 1.10 லட்சம் ஏக்கரில் சம்பா நடவு பணிகள் முடிந்துள்ளது. இந்த தொடர் மழையினால் கொடிக்காலூர், திட்டை, மெலட்டூர், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் சம்பா இளம் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. தற்போது வரை 568 ஹெக்டேரில் அதாவது 1420 ஏக்கரில் சம்பா பயிர்களை மழைநீர் சூழ்ந்தும் பல இடங்களில் மூழ்கியும் சாய்ந்தும் உள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மழை பெய்தால் கூடுதல் பயிர்கள் மூழ்கி விடும். பல இடங்களில் நடவு செய்து ஒரு வாரம் 10 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள இளம் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் அழுகிவிடும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் 17 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை ஒரே நாளில் 17 வீடுகள் இடிந்து சேதமானது. மேலும் மழையின் காரணமாக கால்நடை ஒன்றும் உயிரிழந்ததாக மாவட்ட பேரிடர் கால கட்டுப்பாட்டறைக்கு தகவல் வந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக அணைக்கரையில் 103.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் மஞ்சளாறு 91, பூதலூர் 94, தஞ்சாவூர் 81, திருக்காட்டுப்பள்ளி 73, குருங்குளம் 60 என மாவட்ட முழுவதும் 1140 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.





பெரியகோவிலை சுற்றி பார்க்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. மதியம் 2 மணி வரை தொடர்ந்து மழை கொட்டியது.

இதனால் பெரிய கோவிலில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாகவே காணப்பட்டது. ஒரு சில பக்தர்கள் குடைபிடித்தபடி வந்து சாமி தரிசனம் செய்தனர். மாலை 4 மணி வரை பெரிய கோவிலில் பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக தான் இருந்தது. வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்திலிருந்து வரும் பக்தர்களும் மழையின் காரணமாக வரவில்லை.