தஞ்சை மண்ணின் மைந்தன் என்ற முறையில் தேர் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரின் துன்பத்தில் நானும் பங்கெடுக்கிறேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில், மின்சார கம்பியில் தேர் உரசி ஏற்பட்ட தீ விபத்தில் பலியான, 11 பேர் குடும்பத்தினரை முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் அளிக்க, சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த முதல்வர் ஸ்டாலின், சாலை மார்க்கமாக திருச்சிக்கு வந்தார். பின்னர், அங்கிருந்து களிமேடு கிராமத்திற்கு சென்றார். 


அங்கு, இறந்தவர்களின் உடலுக்கு ஒவ்வொரு வீடாக சென்று, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், அங்கிருந்தவர்களை கட்டி தழுவி ஆறுதல் கூறினார். தொடர்ந்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு சட்டசபையில் அறிவித்த 5 லட்சத்திற்கான நிவாரண உதவி தொகையை வழங்கினார். பின்னர், தீ விபத்தில் எரிந்து சேதம் அடைந்த தேரினை பார்வையிட்டு, சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தி.மு.க., சார்பில் தனியாக தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து, மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;  இச்சம்பவம் தாங்க முடியாது துயரத்தை அளித்துள்ளது.


இந்த துயரத்தை விளக்குவதற்கு வார்த்தைகள் இல்லை. இச்செய்தியை கேள்விப்பட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,கள், அதிகாரிகள், அரசு அலுவலர்கள் என அனைவருக்கும் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, சட்டசபையில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அரசு சார்பில் ஆறுதல் கூறினேன். தஞ்சாவூர் மண்ணின் மைந்தன் என்கிற முறையில் நான், அவர்களின் துயரத்தில் பங்கெடுத்துள்ளேன். 


அத்துடன், விபத்தில் இறந்தவர்களுக்கு அரசு சார்பில், தலா 5 லட்சம் ரூபாயும், தி.மு.க., சார்பில் 2 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. விபத்தில், படுகாயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ரூபாயும் நிவாரண தொகையாக வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க., சார்பில் காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.  


இந்த விபத்து குறித்து சரியான காரணத்தை அறிய வேண்டும் என்பதற்காகவும், வருங்காலத்தில் இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்கவும் என்ன வழிமுறைகள் உள்ளது என்பதை ஆய்வு செய்து அறிக்கை வழங்குவதற்காக, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.


இச்சூழலை அரசியலாக்க வேண்டும் என சிலர் ஈடுபட்டுள்ளனர். அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இதில் அரசியல் பார்க்க கூடாது என்பது தான் என்னுடையே எண்ணம். போற்றுவார், துாற்றுவார் பற்றி நான் கவலைப்படுவது கிடையாது.மக்களுக்கு துயரம் ஏற்பாடமல் காக்கவும், அதையும் மீறி இது போன்ற துயரங்கள் ஏற்படும் போது மக்களோடு இருக்க வேண்டும் என்பது தான் அரசின் இலக்கு. அதை நோக்கியே பயணிப்போம். விசாரணைக்கு பிறகு முழுமையான தகவல் அளிக்கப்படும். விபத்து குறித்து அறநிலையத்துறை, மின்துறை அமைச்சர்கள் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளனர் இவ்வாறு அவர் கூறினார்.   


முதல்வருடன் எம்.பி., டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி,மின்வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லாக்கானி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண