தமிழக அரசின் வேளாண்மை விற்பனை பிரிவு ஒட்டுமொத்தமாக செயலிழந்து விட்டதாக தமிழக காவிரி விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.

 

தமிழக காவிரி விவசாய சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இருள்நீக்கியில் நடைபெற்றது இதில் பேட்டியளித்த தமிழக காவிரி விவசாய சங்க தலைவர், “தமிழ்நாடு அரசு காவிரியில் உரிய காலத்தில் உரிய தண்ணீரை விடுவிக்காமல் ஏற்பட்ட குழப்பத்தால், காவிரி டெல்டாவில் 84 டிஎம்சி தண்ணீர் இருந்தும், அதனை ஒழுங்காக நீர் மேலாண்மை உரிய காலத்தில் தேவையான அளவு விடுவிக்காததால் காலம் கடத்தியதால் மேட்டூர் அணையில் உள்ள தண்ணீரும் வீணடிக்கப்பட்டுள்ளது. குறுவை பாசனப்பகுதியும் வறண்டு கிடக்கிறத.  ஒரு லட்சம் ஏக்கர் குறுவை விளைவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே காவிரி டெல்டா பகுதியை குறுவை பாதித்த பகுதியாக அறிவித்து உரிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். காவிரியில் உரிய நேரத்தில் தண்ணீர் பெற்று தருவதற்கான முயற்சியை தமிழ்நாடு முதல்வர் மேற்கொள்ளவில்லை.

 

கர்நாடக அரசு திட்டமிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என நயவஞ்சகத்துடன் செயல்படுகிறது. மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கங்கணத்துடன் செயல்படுவது தமிழக நலனுக்கு எதிராக உள்ளது. கர்நாடகாவில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதை காவிரி விவசாயிகள் ஏற்க மறுக்கின்றோம். அந்தக் கூட்டம் என்பது தேசிய அளவிலான ஒருங்கிணைப்பு  கூட்டம் என்றாலும் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கர்நாடகாவில் நடைபெறும் கூட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணிக்க வேண்டும். அவ்வாறு அந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்து கொண்டால் கர்நாடக அரசுக்கு துணை போகிறாரோ என்று விவசாயிகளுக்கு அஞ்ச தோன்றுகிறது. 



 

மயிலாடுதுறை  மாவட்டத்தில் உள்ள பகுதிகளான சீர்காழி தரங்கம்பாடி ஆகிய பகுதிகளை  பேரிடர் பாதித்த பகுதிகளாக மாவட்ட ஆட்சியர் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு அரசாணை பிறப்பிக்காததால் கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்துவதற்கு வங்கிகள் விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்கின்றன. நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தும் உயர்நீதிமன்றம் பேரிடர் பாதித்த மாவட்டமாக  பரிந்துரை செய்தும் இதனால் வரை இது குறித்த நீதிமன்ற நடவடிக்கையை தமிழக அரசு புறக்கணிக்கின்றது. இது தமிழ்நாடு விவசாயிகளுக்கு தமிழக அரசு செய்யும் துரோகம், தேங்காய் கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

மேலும் தேங்காய் எண்ணெயை பொது விநியோகத் திட்டத்தில் சேர்த்து விற்பனை செய்வதை கட்டாயமாக வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரமற்ற எண்ணையை தடை செய்ய வேண்டும். பஞ்சி கொள்முதலில் தொடர்ந்து ஊழல் முறைகேடு நடைபெறுகிறது. தமிழ்நாடு மார்க்கெட்டிங் கமிட்டிற்கு பொறுப்பேற்றுள்ள உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொள்ளவில்லை. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் மாநில அளவிலான உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ள காவிரி  டெல்டா மாவட்டங்களை பார்வையிட்டு பருத்தி விவசாயிகளை சந்தித்து அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.



 

தக்காளி விலை உயர்வு விவசாயிகளுக்கு விலை கிடைக்கவில்லை. மழை பெய்து  தக்காளி செடி அழிந்ததால் விளைச்சல் குறைந்துள்ளது. இருந்த போதும் விவசாயிகளிடமிருந்து கிலோ 35 ரூபாய் 40 ரூபாய் என அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்கிறார்கள். மேலும் அதை சந்தையில் விற்பனை செய்யும் பொழுது ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சந்தை கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை. வேளாண்துறையில் விற்பனை பிரிவு ஒட்டுமொத்தமாக செயல் இழந்து விட்டது” எனக் கூறினார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.