தமிழக கடலோர பாதுகாப்பு குழுவினர் பாய்மரப்படகில் 500 நாட்டிக்கல் மைல் தூரம் சென்று மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

 

தமிழ்நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் அந்நிய ஊடுருவலை கண்காணிக்கவும், கடல் மாசுபாட்டை தடுக்கவும்  சென்னை முதல் ராமேஸ்வரம் வரையிலான கடல் சாகச பாய்மரப்படகு பயணத்தை கடந்த 9ஆம் தேதி  டிஜிபி சைலேந்திரபாபு சென்னையில் தொடங்கி வைத்தார்.

 

மீனவ மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் இருந்து புறப்பட்ட இரண்டு பாய்மரப்படகு சாகச குழுவினர் கடலூர் வழியாக நேற்றிரவு காரைக்கால் கப்பல் துறைமுகம் வந்து சேர்ந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று காரைக்கால் கப்பல் துறைமுகத்தில் இருந்து ராமேஸ்வரம் புறப்பட்ட  பாய்மரப்படகு சாகச பயணத்தை  நாகை எஸ்பி ஜவகர், இந்திய கடலோர காவல் படை கமாண்டர் படோலா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

 



 

அதனைத் தொடர்ந்து சமுத்திரத்தை காக்க வேண்டிய 500 நாட்டிக்கல் மைல் தூரம் சாகச பயணம் மேற்கொள்ளும் ராயல் மெட்ராஸ் யார்டு கிளப் மற்றும் தமிழக கடலோர பாதுகாப்பு குழுவினர் காரைக்கால் துறைமுகம் வழியாக நாகை முத்துப்பேட்டை மண்டபம் ராமேஸ்வரம் செல்கின்றனர். இரண்டு பாய்மர படகில் சாகச பயணம் மேற்கொள்ளும் 21 கடலோர பாதுகாப்பு குழுவினர், கடலில் மீனவர்களை சந்தித்து அந்நியர்களின் நடமாட்டத்தை கண்டால் எவ்வாறு போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது என்றும் கடலில் பாலிதீன் போன்ற பைகளை வீசி கடல் வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்க கூடாது என்பது குறித்தும் அவர்களிடம் எடுத்துரைக்கின்றனர். 

 

கடல் சாகச பயணத்தில் நடுக்கடலில் பல்வேறு இடையூறுகள் வந்தாலும், காற்று தங்களுக்கு சாதகமாக இருந்தது என்றும் இதன் காரணமாக நாளை தங்களது சாகச பயணம் ராமேஸ்வரத்தில் முடிவடைய உள்ளதாக ராயல் மெட்ராஸ் யார்ட் கிளப்பின் கேப்டன் விவேக் ஷர்மா தெரிவித்துள்ளார்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண