டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் வழித்தடங்கள் துார்வாரும் பணியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திருச்சியில் தொடங்கி இன்று இரண்டு நாட்களாக ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். நேற்று திருச்சி, தஞ்சை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட  அதனைத் அவர்கள் இன்று நாகை, மயிலாடுதுறை பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.




இந்தாண்டிற்கான குறுவை பருவ நெல் சாகுபடி  டெல்டா மாவட்டங்களில் துவங்கி உள்ளது. இதற்காக, முன்பு எப்போதும் இல்லாத நிகழ்வாக கடந்த 24 -ம் தேதி, குறுவை பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில், கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் செல்வதற்காக, 80 கோடி ரூபாயில் டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளும் நடந்து வருகின்றன. இதுவரை 4,000 கி.மீ., தூர்வாரப்பட்டு உள்ளது. மேலும், 900 கி.மீ க்கு மேல் தூர்வார வேண்டி உள்ளது. அதேபோல, காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர்,  ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் நிறைவுடையும் நிலையிலும் உள்ளன.


 




மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு தூர்வாரும் பணி 2022-ன் கீழ் காவிரி ஆறு, மகிமலையாறு, மஞ்சளாறு, வீரசோழனாறு, நன்டலாறு, மண்ணியாறு, புது மண்ணியாறு, அய்யாவையனாறு, விக்ரமனாறு, பாலாறு மற்றும்  தெற்குராஜன் ஆறுகளில் பிரியும் வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள்  தூர்வாரும் பணிகள் கடந்த மாதம் ஏப்ரல் 24- ஆம் தேதி தொடங்கப்பட்டது.   இதன் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 8.70 கோடி மதிப்பீட்டில் 862.25 கிலோ மீட்டர் தூரம் 49 தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதத்திலேயே தூர்வாரும் பணிகள் துவங்கப்பட உள்ளதாகவும், தூர்வாரும் பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் விவசாயிகள்  அடங்கிய 49 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்திருந்தார். மேலும், விடுபட்ட தூர்வாரும் பணிகளை விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்து பணிகளில் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் கூறினார். 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற


அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற தூர்வாரும் பணிகள் அனைத்தும் நேற்று முன்தினம் நூறு சதவிதம் நிறைவு பெற்றது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 2.5 கோடி மதிப்பீடு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளும் மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் வருவதற்குள் நிறைவு பெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உள்ள ராமச்சந்திரன் வாய்க்காலில் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கருணாநிதி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அங்கிருந்து புறப்பட்டு  திருச்சி ஏர்போர்ட்டுக்கு சென்றடையும் ஸ்டாலின், அங்கு செய்தியாளர்களை சந்தித்துவிட்டு, விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.