காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ பஞ்சவர்ணத்தின் மகன்,  கும்பகோணம் ரயில் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கும்பகோணம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி முத்துசாமி பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவர் கோட்டுச்சேரி தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏவாக இருந்தவர். இவரது மகன் வெற்றிசெல்வன் (42). இவரது மனைவி ராஜேஸ்வரி (34) இவர்களுக்கு ஹன்சிகா (6) என்ற மகளும் உள்ளார். வெற்றிச்செல்வன் காரைக்காலில் மதுபானக்கடைகள் நடத்தி வந்தார். கடந்த சில நாட்களாக  பல்வேறு பிரச்சனைகள் காரணமாக மனமுடைந்த நிலையில் வெற்றிச் செல்வன் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி மாலை தனது கோட்டுச்சேரியில் இருந்து காரில் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. வெற்றிச்செல்வன் வீடு திரும்பாததால், அவரது உறவினர்களும், நண்பர்களும் வெற்றிசெல்வனை பல இடங்களில் தேடி வந்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.




இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி, கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் வெற்றிச்செல்வன் மனைவி ராஜேஸ்வரி தனது கணவரை காணவில்லை என புகார் அளித்துள்ளார். இந்நிலையில், கும்பகோணம் ரயில் நிலையத்தில் கார் ஒன்று வெகுநேரமாகியும் ஒரே இடத்தில் நின்றதாகவும், காருக்கு வெளியே அதன் அருகில் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்ததாகவும், அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் அருகிலிருந்த ரயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் தந்தனர். தகவல் அறிந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் காரின் அருகே இருந்த நபர் இறந்துவிட்டார் என தெரியவந்தது. இதையடுத்து காரை ஆய்வு செய்த ரயில்வே போலீஸார்,  காரின் உள்ளே இருந்த செல்போனை எடுத்து அதில் தொடர்பு கொண்ட எண்களை விசாரணை செய்துள்ளனர்.


விசாரணையில் இறந்தவர் கோட்டுச்சேரி முன்னாள் திமுக எம்எல்ஏ பஞ்சவர்ணத்தின் மகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிவராமன் கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபிக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேற்கு போலீஸார் வெற்றிச்செல்வன் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.வெற்றிச்செல்வன் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.




இது குறித்து போலீசார் கூறுகையில், முன்னாள் எம்எல்ஏ மகன் வெற்றிச்செல்வன், காரைக்காலில் மதுபான கடைகளை நடத்தி வந்துள்ளார். அவருக்கு தொழில் தொடர்பாக பல்வேறு பிரச்சனைகளால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்த அவர், காரில் விஷமருந்திய நிலையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இங்கு வந்தார், அவருடன் யாரும் வந்தார்களா, இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றனர்.


தஞ்சை மாணவி தற்கொலை - மாணவியின் பெற்றோர் நீதிபதி முன் தனித்தனியாக வாக்குமூலம்