திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து,  சம்பந்தப்பட்ட பள்ளிகளில் அனைத்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது.  முதல் அலை தொடங்கியபோதே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா தொற்று 2 ஆவது அலை படுவேகமாக பரவி தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. மூன்றாவது அலை சிறுவர்களை தாக்க கூடும் என்ற அச்சம் இருந்த நிலையில், கடந்த ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும்,  கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பள்ளிகளில் வெப்பமானி பரிசோதனை செய்த பின்னரே மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிகளுக்குள் அனுமதிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து வரவேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும். வகுப்பறையில் 50 சதவீதத்தினரே அனுமதிக்க வேண்டும்  என்பன போன்ற கட்டுப்பாடுகளுடன் பள்ளி, கல்லூரிகள் செயல்படத் தொடங்கியுள்ளன.



இந்த நிலையில் பள்ளி தொடங்கி கடந்த ஒரு வாரம் நிறைவடைவதற்குள்ளாக திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கும்,  மன்னார்குடி அருகே  முன்னாவல் கோட்டை 12ஆம் வகுப்பு மாணவர் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல தலைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவருக்கும் அரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பற்றி தகவலறிந்த  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தியாகராஜன் முன்னாவல் கோட்டை பள்ளியிலும், திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, அடியக்கமங்கலம் பள்ளியிலும் நேரில் சென்று ஆய்வு செய்து மற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கம் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கையையும், பள்ளி முழுமையையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியையும் துரிதப்படுத்தி செய்து வருகின்றனர்.



மேலும் அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்ட உடன் அவருடன் படித்த சக மாணவ மாணவிகள் இன்றும் நாளையும் பள்ளிக்கு வர வேண்டாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் உத்தரவிட்டுள்ளார் மேலும் தொற்று ஏற்பட்ட மாணவியுடன் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தொற்று பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.