ஆலக்குடி பகுதியில் சம்பா, தாளடி அறுவடைப்பணிகள் வெகு மும்முரம்
விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்வதற்காக 3 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு வரையும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே ஆலக்குடியில் விவசாயிகள் சம்பா, தாளடி அறுவடைப்பணிகளை தொடங்கி உள்ளனர். இதையடுத்து இப்பகுதியில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை வாங்கும் பணிகள் விரைந்து நடந்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி 3.24 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 1,50 லட்சம் ஏக்கரில் அறுவடைப்பணிகள் முடிந்துள்ளது. வயல்கள் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் பெல்ட் அறுவடை இயந்திரங்கள் மட்டுமே அறுவடைப்பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் குறைந்த பரப்பளவில் மட்டுமே அறுவடை நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது வயல்களில் ஈரப்பதம் குறைந்துள்ளது. இதனால் டயர் பொறுத்தப்பட்ட பெரிய இயந்திரங்களும் தற்போது நெல் அறுவடைப்பணியில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் வல்லம், 8ம் நம்பர் கரம்பை, சிவகாமிபுரம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை போன்ற பகுதிகளில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது. இதையடுத்து ஆலக்குடி பகுதியில் விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்வதற்காக 3 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு வரையும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஆரம்பத்தில் குறைவாகவே நெல்வரத்து இருந்து வந்த நிலையில் தற்போது இப்பகுதிகளில் அறுவடைப்பணிகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வரத்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை இயந்திரம் வாயிலாக தூற்றி கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் ஆலக்குடி, கல்விராயன்பேட்டை உட்பட பகுதிகளில் மீதமுள்ள பகுதிகளிலும் விவசாயிகள் அறுவடைப்பணிகளை முடிக்க மும்முரம் காட்டி வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் கொள்முதல் நிலையத்திற்கு வரும் நெல்மூட்டைகள் இன்னும் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளது.
தஞ்சாவூர் அருகே சம்பா, தாளடி அறுவடை முடிந்துள்ள வயல்களில் வைக்கோல்களை பாய்போல் சுருட்டி கட்டி வைத்து சொந்த உபயோகத்திற்கும், பிற மாவட்டம், மாநிலங்களுக்கும் கால்நடைகளுக்கு தீவனமாக விற்பனைக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து கடந்தாண்டு டெல்டா மாவட்ட பாசனத்திற்கு குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி இலக்கை மிஞ்சி நடந்து சாதனை படைக்கப்பட்டது. இதையடுத்து சம்பா, தாளடி சாகுபடியில் விவசாயிகள் வெகு மும்முரமாக ஈடுபட்டனர். தற்போது சம்பா, தாளடி பயிர்கள் அறுவடைக்கு தயார் ஆகி உள்ளது. தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் அறுவடைப்பணிகள் மும்முரம் அடைந்து வருகிறது.
இதற்காக கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யும் பணிகளும் நடந்து வருகிறது. தற்போது தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, 8நம்பர் கரம்பை, சிவகாமிபுரம் பகுதிகளில் சம்பா, தாளடி பயிர்கள் அறுவடை முடிந்துள்ளது. இவ்வாறு அறுவடை முடிந்த வயல்களில் வைக்கோலை ஒன்று சேர்த்து பாய்போல் சுருட்டும் இயந்திரங்களையும் வரவழைத்து வைக்கோல் சேகரிக்கப்படுகிறது. இப்படி சுருள் வடிவில் சேகரிக்கப்படும் வைக்கோல் பிற மாவட்டங்களுக்கு விற்கப்பட்டு வாகனங்கள் வாயிலாக அனுப்பப்படுகிறது. கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் மட்டும் வைக்கோல் சுருள்களை தங்களின் வீடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
முன்பு அறுவடை முடிந்து வைக்கோல் குன்று போல் கால்நடை வளர்ப்போர் தங்கள் வீடுகளின் பின்புறத்தில் குவித்து வைத்து இருப்பர். தற்போது இயந்திரங்கள் பயன்பாடு அதிகரித்து விட்டதால் சுருள் வடிவில் சுருட்டப்படுகிறது. இதனால் நேரம் மிச்சமாகிறது. இந்த வைக்கோல் சுருள் ஒரு கட்டுக்கு தற்போது ரூ.110 முதல் ரூ_120 வரை கொடுத்து வியாபாரிகள் எடுத்துச் செல்கின்றனர். இவை பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்தாண்டு ரூ.140 வரை வைக்கோல் கட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இன்னும் இப்பகுதிகளில் அறுவடைப்பணிகள் விறுவிறுப்படையாததால் ரூ.110 வரை வைக்கோல் கட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
அறுவடைக்காக வெளிமாவட்டத்தில் இருந்து இயந்திரங்கள் வருகை அதிகரித்தால் வைக்கோல் அதிகளவு கிடைக்கும். அப்போது விலை குறைந்து விடும் என்பதால் தற்போது விவசாயிகள் தங்களின் கால்நடைகளுக்கு தேவையானதை வைத்துக் கொண்டு மற்ற வைக்கோல்கட்டுகளை விற்பனை செய்து வருகின்றனர்.























