தஞ்சாவூர்: சாகுபடிக்கும், மக்களுக்கும் உயிராக விளங்கும் மழை தண்ணீரை இன்னைக்கு நேத்திக்கு இல்லைங்க ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யோசிச்சு வீணாகாமல் சேகரித்தவர்தான் மாமன்னர் ராஜராஜ சோழன். 


வீணாகும் மழைத்தண்ணீரை சேமிக்கணுமே


அண்ணே... இம்புட்டு மழை பெஞ்சுச்சே.. அந்த தண்ணீ எல்லாம் வீணாதானே போயிருக்கும். இதை சேமிச்சா எம்புட்டு நல்லது. நிலத்தடி நீரும் எவ்வளவு உசந்து இருக்கும் என்று மழைக்காலத்தில் சந்தித்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் நிச்சயமாக பேசிக்கொள்ளும் நிலை இப்போது இல்ல. எப்போதும் இருக்கு. காரணம் தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுதான். 


தஞ்சை பெரிய கோயில் அருகே உள்ள சிவகங்கை குளம்
 
எப்படின்னு தெரிஞ்சுக்குவோம். தஞ்சாவூர் பெரிய கோயிலில் கிடைக்கும் மழைநீர் இன்றளவும் சேமித்து வைக்கப்படும் இடமாக இருப்பதுதான் சிவகங்கை குளம். நம்ம தலைநகரம் சென்னையில ஆரம்பிச்சு கடைக்கோடி கிராமம் வரைக்கும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மழைநீரை சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துக்கிட்டு இருக்கு அரசு. ஆனால் இதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தி காட்டி பாசனத்துக்கும், மக்களின் குடிநீர் தேவைக்கும் மழைநீரை சேகரித்து பயன்படும்படி செய்தவர்தான் மாமன்னன் ராஜராஜசோழன்.




நீர்ப்போக்கும் வழி... சாலவம்


பரந்து விரிந்து தஞ்சையின் பிரமாண்ட அடையாளமாக விளங்கும் பெரிய கோயில் அருகே சிவகங்கை என்கிற குளத்தை வெட்டி, கோயிலில் இருந்து அந்தக் குளத்துக்கு மழைநீர் செல்லும் வகையில் சாலவம் (நீர்ப் போக்கும் வழி) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளார் மாமன்னன் ராஜராஜசோழன். இப்ப இருக்கிற டெக்னாலஜி அப்ப ஏதுங்க. இருந்தாலும் நுட்பமான தொழில்நுட்பமும், தொலைநோக்கு பார்வையுடனும் ராஜராஜ சோழன் செய்த இந்த சாலவத்தை மராட்டிய வம்சத்தின் சரபோஜி மன்னரும் கையாண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தண்ணீருக்காக அமைக்கப்பட்ட சாலவம்


தஞ்சாவூரை ஆண்ட ராஜராஜ சோழன் தனது ஆளுகைக்கு உட்பட்ட நிலங்களை வளப்படுத்த வேண்டும் என்பதற்காகவே குளங்கள், ஏரிகளை வெட்டினார். அதுமட்டுமா மக்களின் குடிநீர்த் தேவைக்கு என்ன செய்வது என யோசித்தவர் பெரிய கோயில் அருகே சிவகங்கை குளத்தை வெட்டினார். சரி குளத்தை வெட்டினா மட்டும் போதுமா. தண்ணீர் வேண்டுமோ... அங்குதான் மாமன்னன் ராஜராஜ சோழனின் தொலைநோக்கு பார்வையும், தொழில்நுட்புமும், சிறந்த மதியூகமும் வெளிப்பட்டுள்ளது.


பெரிய கோயிலில் மழையின்போது கிடைக்கும் தண்ணீரை வீணாக்காமல் சேமித்துப் பயன்படுத்தும் விதமாக கோயிலின் வடக்கு புறத்தில் நீர் போக்கும் வழி என்று அழைக்கப்படும் சாலவம் என்ற வடிகால் போன்ற அமைப்பை கருங்கற்களைக் கொண்டு அமைத்தார்.


தண்ணீரை தடுத்து அனுப்பும் முறை


இதில் தண்ணீரைத் தடுத்து அனுப்பும் முறை உள்ளது. எதற்கு தெரியுங்களா. முதலில் பெய்யும் மழைநீர் அழுக்காக இருக்கும் என்பதால் அந்த நீர் நந்தவனத்துக்குச் செல்லும் விதமாக ஒரு சாலவமும், சிறிது நேரம் கழித்துக் கிடைக்கும் சற்று தெளிவான நீரை குளத்திற்கு கொண்டு செல்ல இரண்டாவது சாலமும் அமைக்கப்பட்டுள்ளது. முதல் சாலவம் வழியாக மழைநீரை நந்தவனத்திற்கு பாய்ச்சி விட்டு, சிறிது நேரம் கழித்து முதல் சாலவத்தை அடைத்துவிட்டு, சிவகங்கை குளத்துக்கு இரண்டாவது சாலவம் வழியாக தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்தார்.




சிவகங்கை குளம் நிரம்பினால் தண்ணீர் எங்கு செல்லும்


அதுமட்டுமா? சிவகங்கை குளம் நிரம்பினால் அந்த தண்ணீரும் வீணாகாமல் அங்கிருந்து அய்யன் குளம், சாமந்தான் குளங்களுக்கும் செல்லும் விதமாக நீர்வழிப் பாதைகள் அமைத்து, அங்கும் மழைநீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பெரிய கோயிலில் அமைக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் நல்ல பயனைக் கொடுத்ததால், அதன் பிறகு ராஜராஜ சோழன் கட்டிய அனைத்து கோயில்களிலும் இந்த மழைநீர் சேகரிப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் தஞ்சாவூரை ஆண்ட 2-ம் சரபோஜி மன்னர், ஜல சூத்திரம் என்கிற அமைப்பை உருவாக்கி, கோட்டையில் உள்ள கிணறுகள், நகரப் பகுதிகளில் உள்ள வீடுகள் ஆகியவற்றுக்கு குடிநீர் செல்லும் விதமாக ராஜராஜ சோழனின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தினார்.


யானை மிதித்தாலும் சேதமடையாத குடிநீர் குழாய்கள்


இத்தகைய குடிநீர் குழாய்களை யானை மிதித்தாலும் சேதமடையாத வகையில் சுண்ணாம்புக் கலவை, சுடு மண் போன்றவற்றை கொண்டு அமைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான நிலையிலும் இன்றளவும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெய்யும் மழைநீர், சாலவம் வழியாகத்தான் சிவகங்கை குளத்துக்கு செல்கிறது.