நாகை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு  நாகை போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

 

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா ராதாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் 60 வயதான முதியவர் ராஜேந்திரன் கூலித் தொழிலாளி.  சம்பவத்தன்று ராஜேந்திரன் வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள் விடுமுறை விட்ட 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி ராஜேந்திரன் அந்த சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். 



 

இதில் கதறி அழுத சிறுமி வீட்டுக்கு ஓடி சென்று தனது பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்தார். இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்  நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 29.07.2020ல் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மணிவண்ணன் தீர்ப்பு அளித்தார். அதில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார்.

 

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராஜேந்திரனை காவல்துறையினர் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். குழந்தைகளை தெய்வமாக போற்றக்கூடிய வயதில் உள்ள முதியவர் மிருகத்தனமான செய்த செயல் மனித சமுதாயத்தில் பாதிக்க வைப்பதாக பாதிக்கப்பட்ட கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.