தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் தற்காலிக பணியில் சேர்ந்த செவிலியர்களின் பணிநீக்க ஆணையை ரத்து செய்து மீண்டும் பணி வழங்கிட கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நேற்றைய முன்தினம் தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டத்தை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். கொரோனா நோய்த்தொற்று காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த போது மருத்துவத் துறையில் ஏற்பட்ட ஆள் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு தற்காலிக செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்பனர்களை பணிக்கு அமர்த்தியது.




இந்த நிலையில் மார்ச் 31 ஆம் தேதியன்று பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியன்று நோய்த் தொற்றில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கு இணங்க ஏனைய மாவட்டங்களில் பணி வழங்கியது போல் திருவாரூர் மாவட்டத்திலும் உடனடியாக பணி வழங்கி, பணி பாதுகாப்பு செய்ய வேண்டும் என்றும், பணியாற்றிய காலங்களில் வழங்க வேண்டிய மூன்று மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. நேற்று காலை தொடங்கிய இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நள்ளிரவு வரை செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு மூன்று செவிலியர்கள் மயக்கமடைந்ததை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.




இந்தப் பணிநீக்க ஆணையால் திருவாரூர் மாவட்டத்தில் 37 செவிலியர்களும், 40 தொழில்நுட்பனர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் உங்களுடைய கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வருக்கு தெரிவிக்கப்படும் எனவும், மூன்று மாத கால ஊதியம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீங்கள் பணிபுரிந்ததற்கு உரிய சான்றிதழ் வழங்கப்படும், மேலும் அரசு பணிகளில் உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் நேற்று நள்ளிரவு உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.