இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (ஐஆர்டிஏஐ) எல்ஐசி முகவர்களின் கமிஷன் குறைப்பு முன்மொழிவை அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் எல்ஐசி அலுவலகம் முன்பு அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்க மாவட்டத் தலைவர் குணசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முகவர்களின் கமிஷன் குறைப்பு முன்மொழிவை கைவிட கோரியும், எல்ஐசியை தனியார் மையமாக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

 



 

 

ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை கோட்ட பொருளாளர் திருவாரூர் கருணாநிதி பேசுகையில்: எல் ஐ சி முகவர்கள் இல்லாத நிலையை இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையும், மத்திய அரசும் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். பிஎஸ்என்எல் இந்திய விமான கட்டுப்பாடு உள்ளிட்ட நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றி வருகின்றனர். இதேபோல் எல்ஐசிஐ தனியார் மையமாக ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். எல் ஐ சி தொடங்கப்பட்ட பொழுது 1956 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கமிஷன் தொகையை தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது. 5 கோடி ரூபாயில் தொடங்கப்பட்டு தற்பொழுது 50 லட்சம் கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் மட்டுமே உள்ளது. இந்த வளர்ச்சி முகவர்களால் ஏற்படுத்தப்பட்டது. கடந்த காலங்களில் எல்ஐசிஐ தனியார் மையமாக முயற்சித்த போது பல்வேறு போராட்டத்தில் இந்த சங்கம் ஈடுபட்டு எல் ஐ சி யும் அதனால் பொது மக்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகளையும் தக்க வைத்துள்ளோம். ஆனால் தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப கமிஷன் உயர்த்த வேண்டும் என்பது நமது நீண்ட நாள் கோரிக்கை. புதிய பாலிசிகளுக்கு 20% கமிஷன் வழங்க வேண்டும், புதுப்பித்தலுக்கு ஐந்து சதவீதம் கமிஷன் வழங்க வேண்டும். ஆனால் ஐ ஆர் ஏ டி ஐ சொல்வதைக் கேட்டு எல்ஐசி கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. குறிப்பாக பொதுமக்களின்  உறுதி அளிக்கப்பட்ட உரிமம் தொகை வழங்கக்கூடாது என்பதில் முயற்சி செய்து வருகின்றனர்.

 



 

எல்ஐசி முகவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் 5 லட்சம் முகவர்கள் இன்று பணி இழந்து சென்றுள்ளனர். அனைத்து முகவர் சங்கங்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றால் எல்ஐசி என்ற ஒரு நிறுவனம் இல்லாத நிலை ஏற்படும் என்றார். இதில்  நூற்றுக்கு மேற்பட்ட எல்ஐசி முகவர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோட்ட துணைத் தலைவர் முனுசாமி, மாவட்ட செயலாளர் பழனிவேல் பொருளாளர் கார்த்திகேயன், பொறுப்பாளர்கள் சரவணன் அன்புமணி ஜவகர் சீனிவாசன் ஆறுமுகம் கலாதேவி மற்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் கபிலன் பரமேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.