நாகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டடப்பட்டு பயன்பாடின்றி உள்ள நூலகத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

 

நாகை நகராட்சிக்கு உட்பட்ட ராமநாயக்கன்குலத் தெருவில் பல்வேறு தரப்பு மக்களும் வசித்து வருகின்றனர். இத்தெருவைச் சுற்றி தியாகராஜபுரம், அண்ணா நகர், வாய்க்காங்கரை, மற்றும் 50 மீட்டர் தொலைவில் புதிய நம்பியார் நகர் சுனாமி குடியிருப்பு உள்ளன. இந்தப் பகுதிகளில் கூலித் தொழிலாளிகள், தனியார் மற்றும் அரசுத்துறைகளில் பணியாற்றுபவர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.



 

இதில், ஏழை எளிய, நடுத்தர மக்கள் அதிகமானோர் உள்ளனர். ஒரு தனியார் பள்ளி, நகராட்சி பள்ளி மற்றும் 2 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. பின்தங்கிய பகுதியாக இருப்பதால், இங்கு உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிறந்த கல்வி, பொது அறிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, கடந்த 2013 ஆம் ஆண்டு, அப்போதைய நாகை மக்களவை உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில், நூலகம் கட்டடம் 2014 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.நூலகத்திற்கு தேவையான மர பீரோக்கள், இருக்கைகள், பெஞ்சுகள் மற்றும் நூல்கள் வைக்கக் கூடிய ராக்குகள் வாங்கப்பட்டன.

ஏ.கே.எஸ்.விஜயன் பதவிக்காலம் முடிந்து, அதிமுகவைச் சேர்ந்த மருத்துவர் கோபால் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரிடம் நூலகத்தை திறக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திமுக மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டது என்பதால், காழ்ப்புணர்ச்சி காரணமாக நூலகம் திறப்பப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

 

இந்நிலையில் மருத்துவர் கோபாலின் பதவிக்காலம் முடிந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.செல்வராஜ் மக்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டு 4 ஆண்டு காலம் நெருங்கும் நிலையில், நூலகம் திறக்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள நூலகத்தில்  மாணவர்களுக்கான இல்லம் தேடி கல்வி நடைபெற்று வருகிறது.



 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: ராமநாயக்கன்குலத் தெருவைச் சுற்றி 9 தெருக்கள் மற்றும் இங்கு 5 பள்ளிகள் உள்ளன. கூலி தொழிலாளர்கள் என வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இவர்களது பிள்ளைகள் கல்வியிலும், பொது அறிவிலும் சிறந்த விளங்கவே நூலகம் கட்டப்பட்டது. ஆனால்10 ஆண்டுகள் கடந்தும் நூலகம் திறக்கப்படவில்லை. நூலகம் திறக்கப்பட்டால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பயன்பெறுவர். தற்போது இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். நூலகம் திறப்பதின் மூலம் அவர்களும் பயன்பெற வாய்ப்பு ஏற்படும். நூலகம் பயன்பாட்டில் இல்லாததால், இரவு நேரத்தில் சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக மாறி வருகிறது. இதனால் அப்பகுதி மக்களும், பெண்களும் பாதிப்பிற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.  எனவே, தேவையான நூல்களை பெற்று, நூலகத்தை திறக்க வேண்டும் என்றனர்.

 

மேலும், வெளிப்பாளையம் காவல்துறையினர் நூலகப் பகுதியில் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.