நாகை அனிச்சியகுடி முச்சந்தி காளியம்மன் ஆலய உண்டியலுக்கு இந்து சமய அறநிலைத்துறையினர் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


நாகை பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அனிச்சியகுடி முச்சந்தி காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா மற்றும் புரட்டாசி பொங்கல் விழா விமரிசையாக நடத்துவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை கோயிலுக்கு வந்த நாகை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ராணி முன்னிலையில் அதிகாரிகள் கோயில் கணக்குகள் குறித்த புகாரின் பேரில் கோயில் வெளியே இருந்த உண்டியலுக்கு சீல் வைத்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் நாகை நாகூர் பிரதான சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த DSP பாலகிருஷ்ணன், வட்டாட்சியர் ராஜசேகரன், நகர மன்ற தலைவர் மாரிமுத்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். கோவில் உண்டியலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றினால் மட்டுமே சாலை மறியல் கைவிடுவதாக தெரிவித்தனர்.




இதனை அடுத்து நகர மன்ற தலைவர் மாரிமுத்து, இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ராணியிடன் பேச்சுவார்த்தை நடத்தி உண்டியல் சீலை அகற்றி தர கோரினர். கோவிலுக்கு வந்த உதவி ஆணையர் ராணி உண்டியல் சீலை அகற்றி சாவிக்கு மட்டும் சீல் வைத்தனர். இதனையடுத்து கோவில் திறக்கப்பட்டு அங்கு தீபாராதனை காட்டப்பட்டது அப்போது பொதுமக்கள் குலவை சத்தம் எழுப்பி சாமி தரிசனம் செய்த பின்னர்  கலைந்தது சென்றனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.