தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த முதுகாடு பகுதியைச் சார்ந்தவர் துரைராஜ் (34) விவசாயி. இவரது மனைவி தேவி (29) நிறை மாத கர்ப்பிணியான இவர் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தேவிக்கு ரத்த அழுத்தக் குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து, முதலுதவி அளித்த மருத்துவர்கள் பேராவூரணி அரசு மருத்துவமனையில் இருந்து, புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வியாழக்கிழமை அதிகாலை சுமார் 1.30க்கு அனுப்பி வைத்தனர். துணைக்கு துரைராஜ் மற்றும் தேவியின் தாயார் உடன் சென்றனர். 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஓட்டுநர் பிரபு, தாயையும், குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தனது உயிரை கூட மதிக்காமல், அவசரமாகவும் கவனமாகவும் வேகமாகவும் இயக்கிக் கொண்டிருந்தார். அதில் மருத்துவ உதவியாளர் பிரகாஷ் என்பவர், பணியிலிருந்து முதலுதவி அளித்து வந்தார்.




இந்நிலையில் பேராவூரணியில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் அம்மையாண்டி- வீரராகவபுரம் என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது  தேவி பிரசவ வலியால் துடித்தார். இதையடுத்து வாகனத்தை ஓரமாக நிறுத்திய போது, பெண் குழந்தை பிறந்தது. பின்னர் மருத்தவ உதவியாளர் பிரகாஷ் முதலுதவி சிகிச்சை அளித்தார். தொடர்ந்து சிகிச்சைக்குப் பிறகு விரைந்து சென்று, தேவி மற்றும் குழந்தையை புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அங்கு மருத்துவர்கள்  சிகிச்சைக்கு பிறகு தாயும் சேயும் நலமாக உள்ளதாக தெரிவித்தனர்.




இக்கட்டான நேரத்திலும் சாதுரியமான முறையில் செயல்பட்டு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் பிரகாஷ் மற்றும் வாகனத்தை திறமையாக இயக்கிய ஓட்டுனர் பிரபு ஆகியோருக்கு தேவியின் கணவர் துரைராஜ் மற்றும் தேவியின் தாயார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இதே போல் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், தாயையும் குழந்தையும் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும், அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த மருத்துவ உதவியாளர் பிரகாஷ் மற்றும் ஒட்டுனர் பிரபுவையும் மருத்துவர்கள், செவிலியர்கள் பாராட்டு தெரிவித்தனர். இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் மேலாளர் கண்ணன் கூறுகையில், பயன்படுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் அட்வான்ஸ் லைப் சப்போர்ட் வாகனம் எனவும், இதில் டெலிவரி கிட், ஆக்சிஜன், வெண்டிலேட்டர் வசதி உள்ளது. ஆபத்தான கட்டத்திலும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு தாய் மற்றும் குழந்தை உயிரை காப்பாற்றி பத்திரமான முறையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என தெரிவித்தார்.


Watch Video| திருட்டு நகையை வாங்க மறுத்த அடகுகடை சேட்டுக்கு அரிவாள் வெட்டு - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு