மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கருவிழந்தநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த கூலி வேலை செய்யும் சரவணன்  நித்தியா தம்பதியினரின் மகன் 17 வயதான ரிஷி பாலன். இவர் செம்பனார்கோவில் இயங்கி வரும் தாமரை மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இம்மாணவன் காட்டுச்சேரி சமத்துவபுரம் விளையாட்டு மைதானத்தில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 




400 மீட்டர்  ஓட்டப்பந்தயத்தில் ஓடிய ரிஷிபாலன் தீடீரென மயங்கி சுருண்டு விழுந்ததாக கூறுகின்றனர். இதனை அடுத்து உடனடியாக அங்கிருந்தவர்கள் ரிஷிபாலனை மீட்டு பொறையார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே ரிஷிபாலன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அறிந்து வந்த மாணவனின் தாயார் மற்றும் உறவினர்கள் மாணவனுக்கு முதலுதவி சிகிச்சையளிக்காமல் காலதாமதம் செய்து அலட்சியப்படுத்தியதால் மாணவன் ரிஷி பாலன் உயிரிழந்து விட்டதாக  குற்றம் சாட்டியுள்ளனர்.  




போட்டியை துவங்கி வைக்க கல்வித்துறை அதிகாரிகள் 3 மணி நேரம் தாமதமாக வந்ததாகவும்,  மாணவன் ரிஷி பாலன் மதியம் மூன்று மணிக்கு மயங்கி விழுந்ததாகவும். ஆனால், மாணவனை மாலை 6 மணிக்கு பொறையார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் மாணவன் மயங்கிய தகவல் பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ள உறவினர்கள் மாணவன் மயங்கி விழுந்தவுடன் முதலுதவி சிகிச்சை செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தால் உயிர் பிழைத்திருப்பான் என்றும் மாணவனின் உயிரிழப்பிற்கு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்தினர் அனைவரின் பொறுப்பின்மையால் மாணவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி பொறையார் காவல் நிலையத்தில் மாணவனின் தாயார் நித்தியா புகார் அளித்துள்ளார். 




மேலும் தனது மகனுக்கு ஏற்பட்ட நிலைமை இனி தமிழ்நாட்டில் ஒருவருக்கும் ஏற்படக் கூடாது என்று கண்ணீர் மல்க மாணவனின் தாயார் நித்தியா நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.  மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை புரிந்த நேரத்தில் விளையாட்டுப் போட்டியில் மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொறையார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி காலை ஒன்பது முப்பது மணிக்கு சரியான நேரத்தில் தான் சென்று துவங்கி வைத்து விட்டதாகவும், அதிகாரிகள் யாரும் காலதாமதம் செய்யவில்லை, அந்த மாணவன் குறித்த முழு விவரமும் அப்பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு தெரிந்திருக்க வேண்டும் அவ்வாறு இல்லாமல், மாணவனைப் பற்றி தெரியாமல் போட்டிக்கு தயார் செய்யாமல், வெற்றி பெற வேண்டும் பள்ளிக்கு பெயர் வேண்டும் என்ற நோக்கத்தில், அப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செயல்பட்டுள்ளார். ஆகையால் இதற்கும் கல்வி அதிகாரி மீது புகார் கூறுவதை நாம் என்ன சொல்வது என தெரிவித்துள்ளார்.




இந்நிலையில் இன்று மாணவனின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மாணவனின்  உடலை உடற்கூறு ஆய்வுக்கு ஒப்புதல் வழங்காமல் மருத்துவமனை அருகே கும்பகோணம் சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


தொடர்ந்து 174 ( இயற்கைக்கு மாறான)வழக்கு பதிவு செய்யப்பட்டதை 304 (ஏ) அலட்சியத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு என மாற்றம் செய்வதாக போலீசார் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து பாஜக, பா.ம.க மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.