மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1987 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 700க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருந்தனர். மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த 23 ஆயிரம் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த ஆலையானது, ஒரு டன்னுக்கு 97 கிலோ உற்பத்தி அரவை தந்தது. 1993 ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. அதன் காரணமாக இந்திய அளவில் சிறந்த ஆலை என்று விருதுகளும் வழங்கப்பட்டது. இந்நிலையில் 1994 ஆம் ஆண்டு  ரூபாய் 33  கோடியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம்  பணிகளை முறையாக செய்யவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில் ஒரு டன்னுக்கு  59 கிலோ மட்டுமே சர்க்கரை அரவை தந்து நஷ்டம் ஏற்பட்டது.

Continues below advertisement

இந்நிலையில் நஷ்டத்தை சந்தித்து வந்த  ஆலையை மறுசீரமைப்பு செய்ய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 2015 ஆம் ஆண்டில் 56 கோடி ரூபாய் நிதி ஆலை புணரமைப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்தார். ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஆலையை புணரமைப்பதற்கான நிதியை தமிழக அரசு இதுநாள் வரை வழங்கவில்லை. தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் 2017 ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. 

Continues below advertisement

இதனையடுத்து ஆலையை புனரமைக்ககோரியும், ஆலையை இயக்ககோரியும் கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலையில் வேலை செய்த ஊழியர்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டனர். மேலும் தற்போது ஆலையில் பணிபுரியும் 129 ஊழியர்களுக்கு கடந்த 28 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. பணிஓய்வு பெற்றவர்களுக்கு சேமநலநிதியும் வழங்கவில்லை. 

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க

இதன் காரணமாக ஆலை தொழிலாளர்கள் சர்க்கரை ஆலை வளாகத்திலேயே கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல்  நிலுவை சம்பளம் வழங்ககோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இன்றுடன் ஒரு மாதமாக ஆலை ஊழியர்கள் இரவு பகலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆலை ஊழியர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று பேரணியாக சென்று கூட்டுறவு சர்கரை ஆலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மணல்மேடு கடை வீதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாக ஆலைக்கு வந்த கட்சியினர், ஆலையின் முன்பு மூடப்பட்ட சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் ஆலை ஊழியர்களுக்கு 28 மாத சம்பள நிலுவைதொகையை வழங்க வேண்டும், ஆலை ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர். மேலும் மயிலாடுதுறை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலையை திறக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.