மன்னார்குடியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட சலூன் கடைகள், எலக்ட்ரானிக் கடைகள் என பத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் நாளை ஏழாம் தேதி வரை தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் இந்நிலையில் இந்த முழு ஊரடங்கை வருகிற 14-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை  நீட்டித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

இந்த நிலையில்  திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு நாளை முதல்  குறைந்த அளவு தளர்வுகளோடு  ஊரடங்கு  அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிற மாவட்டங்களில் கூடுதலாக தளர்வுகள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை பழக்கடைகள் மளிகைக் கடைகள் இறைச்சிக் கடைகள் செயல்படும் எனவும் மேலும் பெரிய வணிக நிறுவனங்கள் எதுவும் செயல்படாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது



இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மருந்தகம், பால் விற்பனை நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட சிலவற்றை தவிர அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முழு ஊரடங்கு உத்தரவை செயல்படுத்தும் வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மன்னார்குடியில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினரும் நகராட்சி அதிகாரிகளும்  தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்  அதனையொட்டி  தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி  மன்னார்குடி கடைவீதியில் சில கடைகள் திறக்கப்பட்டு  செயல்பட்டு வந்தன. குறிப்பாக சலூன் கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள் திறந்திருப்பது கண்டறியப்பட்டது.

 

இதனையடுத்து மன்னார்குடி நகரின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை செய்ததில் சுமார் 10 கடைகளை திறந்து உரிமையாளர்கள் செயல்பட்டிருப்பது கண்டறியப்பட்டு அவற்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து விற்பனை செய்ததால் கடையின் உரிமையாளர்களிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் அபராதமாக வசூலித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.



மேலும் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுவரை 3 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் அரசின் உத்தரவை மீறி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டால், நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் மன்னார்குடி நகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.