தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழுவின்  தலைவர் மற்றும் கம்பம் எம்எல்ஏ  ராமகிருஷ்ணன் தலைமையில், உறுப்பினர்கள் மேலூர் எம்எல்ஏ  பெ.பெரியபுள்ளான் (எ) செல்வம்,  சேந்தமங்கலம் எம்எல்ஏ கே.பொன்னுசாமி, கங்கவல்லி எம்எல்ஏ அ.நல்லதம்பி,  தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி நீலமேகம் ஆகியோர்  தஞ்சாவூரில் பூம்புகார், ஆவின், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.



இக்குழுவினருக்கு, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  கைவினைப் பொருட்களின் தரம், நடைபெறும் பணிகள் குறித்து விளக்கமளித்தார். பின்னர் குழு தலைவர் நா.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்றுள்ள தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் ஓவியம், தலையாட்டி பொம்மை,  நாச்சியார் கோவில் குத்து விளக்கு போன்ற விற்பனைப் பொருட்களையும், தஞ்சாவூர் கலைத்தட்டு உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.



தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய தஞ்சாவூர் அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் 60 கிலோ வாட் திறனுள்ள மின் கட்டமைப்புடன் கூடிய சூரிய மேற்கூரை மின்நிலையம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகாமின் செயல்பாடு மற்றும் பயன்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த எரிசக்தி மேம்பாட்டு ரூ.36 லட்சம்  செலவில் நிறுவப்பட்டுள்ளது. எரிசக்தி மேம்பாட்டு மூலமாக நாளொன்றுக்கு தோராயமாக 240 யூனிட்கள் வீதம் ஆண்டுக்கு சராசரியாக 87,600 யூனிட்கள் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் கட்டணத்தை பொறுத்தவரையில் எரிசக்தி மேம்பாட்டு முகமையால் நிலையான மின்கட்டணமாக யூனிட்டு ஒன்றுக்கு ரூ.4.65 வீதம் 25 வருடத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் முலமாக ஆண்டொன்றுக்கு தோராயமாக 72 டன் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியீடு குறைக்கப்படுகிறது. இதன் செயல்பாடு பாராட்டும் வகையில் உள்ளது.


இதே போன்று தமிழகத்தில் பிற இடங்களிலும் பல்வேறு துறை சார்பில் அமைக்க நாங்கள் பரிந்துரை செய்ய உள்ளோம். தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில்  23,400 பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து 445 கிராம பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 88 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

நாளொன்றுக்கு 48 ஆயிரம்  லிட்டர் திறன் கொண்ட பால் பதப்படுத்தும் பால்பண்ணையும், நாளொன்றுக்கு 30 ஆயிரம்  லிட்டர் திறன் கொண்ட ஒரு பால் குளிரூட்டும் மையமும் மற்றும் மொத்தம் 50 ஆயிரம்  லிட்டர் திறன் கொண்ட 9 தொகுப்பு பால் குளிர்விப்பான் நிலையமும் செயல்பட்டு வருவதையும், பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


ஆய்வின் போது  தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.