தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டுதுளைக்கப்பட்ட விடைப்படகில் இந்திய கடற்படை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருவதுடன் சிகிச்சை பெற்றுவரும் 9 மீனவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் கடந்த 15 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் விசைப்படகு மீது, இந்திய கடற்படை அதிகாரிகள் நடத்திய திடீர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் வீரவேல் படுகாயமடைந்தார்.

 

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவர் வீரவேல் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மற்ற மீனவர்கள் 9 பேர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்திய கடற்படை அதிகாரி காமண்டர்விஷால் குப்தா தலைமையிலான அதிகாரிகள் நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் ஆய்வு மேற்கொண்டனர். 



துப்பாக்கி சூடு சம்பவம் எப்படி நடந்தது? படகில் எத்தனை  துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன? படகில் ஏற்பட்டுள்ள சேதம் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், இந்திய கடைபடையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தால் விசை படகில் 47 குண்டுகள் துளையிடப்பட்ட ஓட்டைகள் இருப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 9 மீனவர்களிடம் விசாரணை நடத்திய இந்திய கடற்படை அதிகாரிகள் காயமடைந்த மீனவரிடம் விசாரணை நடத்த மதுரை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.