நீங்கள் இதை செய்தால்... நாங்கள் அதை செய்கிறோம்: துணை முதல்வர் கொடுத்த வாக்குறுதி என்ன?
திருவையாறு தொகுதியில் போட்டியிடும் துரை.சந்திரசேகரனுக்கு வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் என உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளேன்.

தஞ்சாவூர்: நீங்கள் இதை செய்தால்... நாங்கள் அதை செய்கிறோம் என்று திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளர் துரை.சந்திரசேகரனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு வாக்குறுதியை அளித்தார். அது என்ன தெரியுங்களா?
திருவையாறு தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்தாலே தனி சந்தோஷம்தான். மறைந்த முதல்வர் கருணாநிதி நான் டெல்டாக்காரன் என்று சொல்லுவார். அதேபோல்தான் முதல்வர் ஸ்டாலினும் தன்னை டெல்டாக்காரன் என்கிறார். இப்போது நானும் அதையேதான் சொல்கிறேன். தஞ்சாவூர் என்பது திமுகவின் கோட்டை. இந்த மாவட்டத்தில் 8 தொகுதிகள் உள்ளது. இதில் கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் 7 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது .இந்த முறை 8 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்ல வேண்டும். நிச்சயம் வெல்லும்.
இங்கு கூடியுள்ளவர்களை பார்த்தாலே ஒரு எழுச்சி தெரிகிறது, எனவே திமுக இங்கு வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இங்கு போட்டியிடும் வேட்பாளர் துரை .சந்திரசேகரன் 5 முறை எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார், தற்போது 6-வது முறையாக சிக்ஸர் அடித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். அவரை 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெறச் செய்தால், நீங்கள் கேட்பது போல் அவரை அமைச்சராக்க தலைவரிடம் எடுத்துக் கூறுவேன்.
நானும் வேட்பாளராக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறேன், ஆனால் அதை அடிக்கடி மறந்து விடுகிறேன். கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறேன். நான் போட்டியிடும் தொகுதிக்கு கூட ஒரு முறை தான் சென்று உள்ளேன், தற்போது இந்த தொகுதியில் போட்டியிடும் துரை.சந்திரசேகரனுக்கு வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் என உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளேன். காரணம் எனது வெற்றியை விட உங்கள் தொகுதி வேட்பாளரின் வெற்றிதான் முக்கியம்.
இந்த திருவையாறு தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எம்எல்ஏவாக இருந்த துரை.சந்திரசேகரன் முயற்சியால் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது பல கோரிக்கைகளை துரை.சந்திரசேகரன் என்னிடம் வழங்கியுள்ளார், நிச்சயமாக திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும்.
அதேபோல் தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் திமுக ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்றிய தர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசு எவ்வித ஒத்துழைப்பும் தரவில்லை. தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை வழங்க மறுத்து வருகிறது .ஆனால் மீண்டும் இந்தி மொழியை திணிக்க முயற்சிகளை எடுத்து வருகிறது, இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி, ஜாடிக்கேத்த மூடி மாதிரி மோடிக்கேத்த முரட்டு அடிமையாக செயல்பட்டு வருகிறார்.
பதவிக்காக நான் யார் காலில் விழும் அனுபவம் எனக்கு கிடையாது, ஆனால் பழனிசாமி பதவிக்காக ஜெயலலிதா, சசிகலா, டிடிவி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது காலில் விழுந்து, அவர்களது காலை வாரி விட்டவர். தற்போது மோடியின் காலை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தை ஆள பாஜக பழனிச்சாமியை ஒரு ரிமோட்டாக மாற்றி வருகிறது. இந்த முறை டெல்லி அணிக்கும் தமிழகத்துக்கும் நடைபெறும் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும், இன்னும் 16 நாட்கள் தான் உள்ளது. இதில் ஒவ்வொருவரும் அவரவர் பகுதிக்கு சென்று தங்களுக்கு தெரிந்தவரிடம் திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரித்து திருவையாறு தொகுதியில் துரை. சந்திரசேகரனை வெற்றி பெறச் செய்தால் நீங்கள் கேட்டது போல் அவரை அமைச்சராக்க தலைவரிடம் எடுத்துக் கூறுவேன். இவ்வாறு அவர் பேசினார். அப்போது திரண்டிருந்த தொண்டர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர்.























