ஜி.எஸ்.டி விலக்கு... பங்குச்சந்தை அபாயமும் இல்லை! தபால் காப்பீடு எடுக்க ஜூன் 25 வரை நல்ல வாய்ப்பு
மத்திய அரசின் முழுமையான பாதுகாப்புடன் செயல்படும் இந்த காப்பீட்டு திட்டங்களின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இதில் மிகக் குறைந்த பிரீமியம் தொகையில், அதிகபட்ச போனஸ் வழங்கப்படுகிறது.

தஞ்சாவூர்: தஞ்சை கோட்டத்திற்குட்பட்ட அனைத்து தபால் அலுவலகங்களிலும் தபால் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய தபால் ஆயுள் காப்பீட்டுக்கான சிறப்பு முகாம்கள் வரும் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது என்று தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தபால்துறை பொதுமக்களின் தேவைகளை உணர்ந்து ஆதார் சேவை, பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்கள் மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் உள்ளிட்ட பல பயனுள்ள சேவைகளை தொய்வின்றி வழங்கி வருகிறது. குறிப்பாக, தபால்துறை சார்பில் ஆங்காங்கே நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களிடையே இந்த சேவைகளுக்கு மிகச்சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
விரிவுப்படுத்தப்பட்ட காப்பீட்டுத் திட்டம்
முன்னதாக, அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த தபால் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (PLI) தற்போது தகுதியுடைய அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ உள்ளிட்ட கல்வித்தகுதிகளைப் பெற்ற தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் தனிநபர்களும் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.
அதேபோல், கிராமப்புற மக்களின் வாழ்வாதார பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் 'கிராமிய தபால் ஆயுள் காப்பீட்டு திட்டம்' (RPLI) சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்த திட்டத்தைப் பயன்படுத்தி தங்களது எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
குறைந்த பிரீமியம் - அதிக போனஸ்
மத்திய அரசின் முழுமையான பாதுகாப்புடன் செயல்படும் இந்த காப்பீட்டு திட்டங்களின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இதில் மிகக் குறைந்த பிரீமியம் தொகையில், அதிகபட்ச போனஸ் வழங்கப்படுகிறது. மேலும், இது பங்குச் சந்தை ஏற்ற இறக்க அபாயங்கள் இல்லாத, முற்றிலும் பாதுகாப்பான முதலீட்டு திட்டமாக விளங்குகிறது.
ரூ.278 கோடி மதிப்பிலான பாலிசிகள் விநியோகம்
தஞ்சை தபால் கோட்டத்தில் இத்திட்டம் மக்களிடையே அமோக ஆதரவைப் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் தஞ்சை கோட்டத்தில் புதிதாக 7,800 பயனாளர்கள் இக்காப்பீட்டு திட்டங்களில் இணைந்துள்ளனர். இதன் மூலம் ரூ.6.56 கோடி பிரீமியம் வசூலிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களுக்கு ரூ.278 கோடி மதிப்பிலான காப்பீட்டு பாலிசிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஜி.எஸ்.டி விலக்கு
மேலும், மத்திய அரசின் தபால் ஆயுள் காப்பீட்டு திட்டங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (GST) முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதல் சுமையின்றி, குறைந்த பிரீமியத்தில் அதிகபட்ச பலன்களைப் பெற முடியும்.
எனவே, தஞ்சை கோட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் வருகிற 25ம் தேதி வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி, தங்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகி காப்பீட்டு திட்டங்களில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
ட்ரெண்டிங் செய்திகள்





















