மழை சாரலில் மீண்ட பசுமை... மேய்ச்சலில் மூழ்கிய ஆயிரம் ஆடுகள்! கால்நடை வளர்ப்போரின் முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சி
கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மிதமான மழை காரணமாக, அறுவடை முடிந்த வயல்களிலும், காலியாக இருந்த நிலங்களிலும் பசுமையான புல் பூண்டுகள் மீண்டும் முளைத்துள்ளன.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்த மழை, வெயிலால் வறண்டு கிடந்த நிலங்களுக்கு மீண்டும் உயிரூட்டியுள்ளது. நீண்ட நாட்களாக பசுமையை இழந்து வெறிச்சோடி காணப்பட்ட வயல்வெளிகளில் தற்போது புல் பூண்டுகள் முளைத்து பசுமை பரவத் தொடங்கியுள்ளன. இதனால் கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புற பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வயல்வெளிகள் வறண்டு காணப்பட்டன. பசுமை இல்லாததால் கால்நடைகளுக்கு போதிய அளவில் மேய்ச்சல் கிடைக்காமல், அதனை வளர்ப்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர். கால்நடைகளுக்கு தீவனங்களை அதிக விலைக்கு வாங்க வேண்டிய சூழலும் ஏற்பட்டிருந்தது. முக்கியமாக கிராமப்புறங்களில் சம்பா, தாளடி சாகுபடி முடிந்ததும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து ஆட்டு கிடை போடும் வழக்கம் இருந்து வருகிறது. ஆனால் இந்தாண்டு ஏப்ரல் மாதத்திலேயே வெயில் தாக்கல் அதிகம் இருந்ததால் வயல்கள் வறண்டு போய் கிடந்தன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மிதமான மழை காரணமாக, அறுவடை முடிந்த வயல்களிலும், காலியாக இருந்த நிலங்களிலும் பசுமையான புல் பூண்டுகள் மீண்டும் முளைத்துள்ளன. இயற்கையாக உருவாகியுள்ள இந்த மேய்ச்சல் நிலங்கள் தற்போது கால்நடைகளுக்கு உணவு களஞ்சியமாக மாறியுள்ளன.
இதன் காரணமாக கால்நடை வளர்ப்போர் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஆடுகளை வயல்வெளிகளில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்கின்றனர். பரந்து விரிந்த வயல்வெளிகளில் வெள்ளை நிற மேகக் கூட்டங்கள் பூமியில் இறங்கி நடமாடுவது போன்ற தோற்றத்தில் ஆடுகள் மேய்ந்து வரும் காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்து வருகிறது.
ஒருபுறம் பசுமை முளைத்த வயல்கள், மறுபுறம் அமைதியாக மேய்ந்து செல்லும் ஆடுகளின் கூட்டங்கள் என இயற்கை எழிலுடன் கிராமப்புறங்கள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன. மழை காரணமாக இயற்கை மேய்ச்சல் கிடைத்திருப்பதால் தீவனச் செலவுகள் குறையும் என்பதால் கால்நடை வளர்ப்போர் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கால்நடை வளர்ப்போர் கூறுகையில், "கடந்த சில வாரங்களாக பசுமை இல்லாமல் கால்நடைகளுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் இருந்தது. தற்போது மழை பெய்ததால் இயற்கையாக புல் முளைத்துள்ளது. இதனால் ஆடுகளை எளிதாக மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடிகிறது. தீவனச் செலவும் குறைந்துள்ளது. ஆடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் வயல்களில் இயற்கை உரமாக அதன் சாணம் விவசாயிகளுக்கு உதவியாக உள்ளது. இதனால் இயற்கை எரு கிடைத்து வயல் வளம் பெறும் என்றனர்.
மழை வெறும் தண்ணீரை மட்டுமல்ல, கிராமங்களின் வாழ்வாதாரத்தையும் மீண்டும் துளிர்விடச் செய்துள்ளது என்றே அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















