பிளஸ்-2 மாணவர்களே அலர்ட்... மத்திய பாதுகாப்பு படையில் 394 காலிப் பணியிடங்கள்: தேர்வு முறை என்ன?
ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்குச் சேவை செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு தேடி வந்துள்ளது

தஞ்சாவூர்: 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு: தேசிய பாதுகாப்பு அகாடமியில் 394 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக UPSC அதிகாரபூர்வமாக அறிவிப்பு ெளியிட்டுள்ளது.
ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்குச் சேவை செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு தேடி வந்துள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC), தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) மற்றும் கடற்படை அகாடமி (NA) ஆகியவற்றில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 394 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ள மாணவ, மாணவிகள் வரும் ஜூன் 9, 2026-க்குள் ஆன்லைன் தளம் வழியாக இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்களின் முழு விவரம்
இந்த அறிவிப்பின்படி, தேசிய பாதுகாப்பு அகாடமியில் 370 இடங்களும், கடற்படை அகாடமியில் 24 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கும் இதில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.
தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA): 370 இடங்கள்
இராணுவம் (Army): 208 இடங்கள் (ஆண்கள் – 198, பெண்கள் - 10)
கடற்படை (Navy): 42 இடங்கள் (ஆண்கள் – 37, பெண்கள் - 5)
விமானப் படை (Air Force): 120 இடங்கள் (ஆண்கள் - 114, பெண்கள் - 6)
தேசிய கடற்படை அகாடமி (Naval Academy): 24 இடங்கள்
ஆண்கள் – 21, பெண்கள் - 3
தகுதி வரம்புகள்
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு (Plus Two) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது 12-ஆம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதி முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
வயது வரம்பு: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 17 வயது முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டியது அவசியமாகும்.
தேர்வு செய்யப்படும் முறை
யு.பி.எஸ்.சி நடத்தும் இந்தத் தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதலாவதாக, நாடு முழுவதும் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் எழுத்துத் தேர்வு (Written Examination) நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு, அடுத்த கட்டமாகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் சேவைகள் தேர்வு வாரியத்தால் (SSB) நடத்தப்படும் நேர்முகத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை
கட்டண விவரம்: பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண்கள், எஸ்சி (SC) மற்றும் எஸ்டி (ST) பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் தளம்: தகுதியுடையவர்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://www.upsconline.nic.in/ என்ற பக்கத்திற்குச் சென்று ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 09.06.2026
மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் உயரிய பொறுப்பில் நல்ல ஊதியத்துடன் பணிபுரிய நினைக்கும் பிளஸ்-டூ முடித்த மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இறுதி நாளுக்கு முன்பாகவே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















