உச்சத்தை தொடும் தங்கம் விலை... கிடுக்கிப்பிடி போட தயாராகும் மத்திய அரசு
தங்கம் விலை உயர்வுக்கு பின்னணியில் அதிர்ச்சி தரும் தகவல்கள் உள்ளது என்கின்றனர் விபரமறிந்த வட்டாரத்தினர்.

தஞ்சாவூர்: தங்கம் விலை ராக்கெட் ஏறி விண்ணுக்கு சென்று கொண்டு இருக்கிறது. இதனால் நடுத்தர மக்களுக்கு தங்கம் என்பது கனவாகிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தங்கம் வாங்க ஆதார் கார்டு, பான் கார்டு அவசியம் என்ற திட்டத்தை செயல்படுத்தி விலை உயர்வுக்கு கிடுக்கிப்பிடி போட மத்திய அரசு தயாராகி வருகிறதாம்.
தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை MCX சந்தையில் சுமார் ரூ. 1.6 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதேபோல, வெள்ளி விலை ரூ. 3.5 லட்சத்தை நோக்கி நகர்ந்துள்ளது. தங்கம் விலை உயர்வுக்கு பின்னணியில் அதிர்ச்சி தரும் தகவல்கள் உள்ளது என்கின்றனர் விபரமறிந்த வட்டாரத்தினர். உலகளாவிய நிச்சயமற்ற தன்மை, புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரிப்பு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, ஊழல் அரசியல்வாதிகள் தங்கத்தில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் வாங்குவது போன்ற காரணங்கள் பிரதானமாக உள்ளதாக நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

நிலமோ, இடமோ, வீடுகளோ, சொத்துக்களோ என்றால் தெரிந்து விடும் என்பதால் ஊழல்வாதிகள் தங்கள் பணத்திற்கு தங்கத்தை வாங்கி குவிக்கின்றனர். இது நடுத்தர குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு கூட தங்கம் குண்டுமணி அளவிற்கு கூட வாங்க முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
தங்கம், வெள்ளி விலை கடந்த ஓராண்டுக்கு மேலாக புதிய பாதையில் பயணிக்கிறது. ஏற்றம்-இறக்கம் என்ற நிலை நீடித்தாலும், பெருமளவில் ஏறுமுகத்திலேயே இரண்டும் இருந்து புதிய உச்சத்தை தாண்டுகிறது.
தங்கம் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டுமா? என பேசி வந்த நிலையில், அதனையும் கடந்து இப்போது ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதேபோல், வெள்ளி விலையும் ஒரு கிலோ ரூ.1 லட்சத்தை கடக்குமா? என பலர் கேட்டு வந்த சூழலில், ரூ.1 லட்சம் மட்டுமல்ல, ரூ.2 லட்சம் ஏன் ரூ.3 லட்சத்தையும் தாண்டி, அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இவ்வளவு நிலைகளை கடந்தும், மேலும் தங்கம், வெள்ளி விலை அதிகரித்து கொண்டே வருவதைதான் பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் நேற்றும் விலை உயர்ந்து இருந்தது. தங்கம் விலையை பொறுத்தவரையில், நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 450-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.160-ம், பவுனுக்கு ரூ.1,280-ம் உயர்ந்திருந்தது. பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.290-ம், பவுனுக்கு ரூ.2,320-ம் அதிகரித்தது.
ஆக நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.450-ம், பவுனுக்கு ரூ.3,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் தங்கம் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.730-ம், பவுனுக்கு ரூ.5,840-ம் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் விலை உயர்ந்து வரும் தங்கம் அரசியல் அரங்கில் பெரும் பாதிப்பை பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று மத்திய அரசு நினைக்கிறதாம். குறிப்பாக ஊழல்வாதிகள் வாங்கி குவிக்கும் தங்கத்தால்தான் இவ்வாறு விலை உயர்கிறது. கணக்கில்லாமல் தங்கம் பதுக்கப்படுகிறது என்றும் மத்திய அரசுக்கு தகவல்கள் பறந்துள்ளன.
இதையடுத்து தங்கத்தின் விலைக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில் மத்திய அரசு அதிரடியாக களம் இறங்க உள்ளதாம். அதற்காக இனி குறிப்பிட்ட அளவிற்கு மேல் தங்கம் வாங்க ஆதார் மற்றும் பான் கார்டு அவசியம் என்ற திட்டத்தை கொண்டு வர உள்ளதாம். இதை அனைத்து தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை நிறுவனங்களும் மேற்கொண்டே ஆகவேண்டும். இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையுடன் மத்திய அரசு களம் இறங்க உள்ளதாம். குறிப்பிட்ட அளவு சவரனுக்கு மேல் யார்யார் தங்கம் வாங்குகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடியும். இதனால் ஊழல்வாதிகள் சிக்கிக் கொள்வார்கள் என்று மத்திய அரசு நினைப்பதாக கூறப்படுகிறது. அரசியல் அரங்கில் தங்கத்தின் விலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்பாக இந்த கிடுக்கிப்பிடியை போட மத்திய அரசு தயாராகி வருகிறதாம். இந்த் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக அனைத்து தங்க விற்பனை நிறுவனங்களையும் அழைத்து ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.
தங்கம் விலை ராக்கெட் வேகம் என்றால், வெள்ளி விலை 'ஜெட்' வேகத்தில் இருக்கிறது. தினமும் தாறுமாறாக அதிகரிக்கிறது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.12-ம், கிலோவுக்கு ரூ.12 ஆயிரமும், பிற்பகலில் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் என ஒரே நாளில் கிராமுக்கு ரூ.22-ம், கிலோவுக்கு ரூ.22 ஆயிரமும் எகிறி, ஒரு கிராம் ரூ.340-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிலோ ரூ.3½ லட்சத்தை தாண்டிவிடும் என கணிக்கப்பட்டு வந்த நிலையில், அது இந்த மாதம் இறுதிக்குள்ளாகவே அந்த நிலையை எட்டிவிடும் என்றே சொல்லப்படுகிறது. இதனால் தங்கம், வெள்ளி விற்பனையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தீவிரமாகியுள்ளது என்கின்றனர்.






















