வேதாரண்யம் மேல கோபுர வாசலிலுள்ள   தனியார்  உணவகத்தில் கேஸ் சிலிண்டர்  வெடித்து திடீர் தீ விபத்து ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதராணீஸ்வர்  ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின்  மேல  கோபுர வாசலில் உள்ள அமைந்துள்ள தனியார் உணவகம் (சூர்யா மெஸ்)  சமையல் கூடத்திலுள்ள  கேஸ் சிலிண்டர் வெடித்து  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீ  சுமார் 20 அடி உயர்த்திற்கு மேலோங்கி எரிய துவங்கியது. அதோடு எழும்பிய  கரும்புகை  காரணமாக ஓர்  பரபரப்பான சூழல் நிலவியது. இக்கடையை ஒட்டி பல்வேறு வகையான சிறு சிறுக்கடைகள் மற்றும் சிறிது தூரத்தில் வீடுகளும் மிகவும் நெருக்கமாக உள்ளது. தீ பற்றியதை தொடர்ந்து  பொதுமக்கள்  அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்க தொடங்கினர்.

 



 

 

உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த  வேதாரண்யம் தீயணைப்புத் துறையினருக்கு  வெகு நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றார். ஒரு மணி நேர கடின போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். சமையல் கூடும் என்பதால் கேஸ் சிலிண்டர் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்களை அருகில் செல்ல விடாமல் வேதாரண்யம் காவல்துறையினர்  தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர்.

 

நல்வாய்ப்பாக  உயிரிழப்புகள் மற்றும்  பெரும்  பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது. கேஸ் சிலிண்டர் வெடித்து திடீரென ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கும் போது ஒவ்வொரு வணிக நிறுவனங்களிலும் தீ விபத்தின் போது வெளியே செல்ல கட்டிட அமைப்பு உள்ளதா எனவும் தீயணைப்பான் மற்றும் சிலிண்டர் கேஸ் அடுப்பு  உள்ளிட்டவைகளை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மாதம் ஒரு முறையாவது ஆய்வு செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.