தஞ்சாவூர்: விதைகள் மசோதா மற்றும் மின்சார மசோதா ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி அவற்றின் நகல்களை தீயிட்டு எரிக்கும் போராட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்தது.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மத்திய பாஜக அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள, விதைகள் மீதான விவசாயிகளின் உரிமையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும், விதைகள் மசோதா - 2025, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும், மின்சார மசோதா - 2025 ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி, அவற்றின் நகல்களை தீயிட்டு எரிக்கும் போராட்டம், திருவையாறு ஒன்றியம், வரகூர், அம்மையகரம், மணத்திடல், கண்டியூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவையாறு ஒன்றியச் செயலாளர் கே.மதியழகன் தலைமையில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, அடிமனை மற்றும் குத்தகை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ராம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் பிரதீப் ராஜ்குமார், கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அம்மாபேட்டை ஒன்றியம், ராராமுத்திரக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற நகல் எரிப்பு போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், ஒன்றியச் செயலாளர் கே.முனியாண்டி, ஒன்றியத் தலைவர் எஸ்.வி.கருப்பையா, ஒன்றியப் பொறுப்பாளர் மயில்வாகனன், துணைத் தலைவர் மாணிக்கம் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு ஊராட்சியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார் தலைமையில், மூத்த தோழர் வீ.கருப்பையா முன்னிலையில் விவசாயிகள் கலந்து கொண்டு மசோதா நகலை தீயிட்டு எரித்தனர்.
பேராவூரணி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளருமான என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், எம்.செல்வம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் வே.ரெங்கசாமி, வி.ஆர்.கே.செந்தில்குமார், வீ.கருப்பையா, தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விதை மசோதா, மின்சார மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற கோரி தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள வரகூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பாஜக அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள விதைகள் மீதான விவசாயிகளின் உரிமையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் விதைகள் மசோதா - 2025, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார மசோதா - 2025 ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி அவற்றின் நகல்களை தீயிட்டு எரித்து, முழக்கங்கள் எழுப்பினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவையாறு ஒன்றியச் செயலர் கே. மதியழகன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் ஏ. ராஜா, அடிமனை மற்றும் குத்தகை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் எம். ராம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் பிரதீப் ராஜ்குமார், கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல, அம்மையகரம், மணத்திடல், கண்டியூர் ஆகிய ஊர்களிலும் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.