தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பூண்டியில், த.வெ.க., நிர்வாகியை அரிவாளால் வெட்டிய தி.மு.க., நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த தவெக நிர்வாகி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி தோப்புத்தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் (42) .  இவர் தமிழக வெற்றி கழகத்தின் பூண்டி கிளை இணை செயலாளராக உள்ளார்.  இவரது உறவினர் ரஜினி, தி.மு.க., கிளை நிர்வாகியாக உள்ளார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு த.வெ.க.,வுக்கு ஓட்டு கேட்கக்கூடாது என வேலாயுதம் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தகராறு செய்து ரஜினி தாக்கியுள்ளார். இது தொடர்பாக அம்மாபேட்டை போலீசில் வேலாயுதம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நேற்றுமுன்தினம், வாக்குச்சாவடியில் இருந்த போது, ரஜினி மீண்டும் வேலாயுத்திடம் தகராறு செய்து விட்டு, வீட்டில் இருந்த வேலாயுதம் மனைவி காஞ்சனாவை தாக்க முயன்றார். இதை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தடுத்துள்ளனர். 

Continues below advertisement

பிறகு, நேற்றுமுன்தினம் இரவு  ஓட்டுப்பதிவு முடிந்து வேலாயுதம் வீட்டிற்கு சென்ற போது, அவரை ரஜினி வழிமறித்துள்ளார். தொடர்ந்து விசில் சின்னத்திற்கு அதிக ஓட்டுகள் வந்தால் நீ தான் காரணம், எனக் கூறி வேலாயுதத்தை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார். அப்போது அங்கு வந்த வேலாயுதம் மனைவி காஞ்சனாவையும் ரஜினி காதில் வெட்டி விட்டு, தப்பியோடிவிட்டார்.  

இதில் படுகாயமடைந்த வேலாயுதம், காஞ்சனா இருவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜினியை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேலாயுதம், அவரது மனைவி காஞ்சனா இருவரையும், த.வெ.க., மத்திய மாவட்ட செயலாளரும், வேட்பாளருமான விஜய்சரவணன் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இதுகுறித்து போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் விஜய் சரவணன் வலியுறுத்தி உள்ளார்.