சோழமன்னர்களின் பண்டைய தலைநகரமாக கும்பகோணத்தை அடுத்த பழையாறை ஒருகாலத்தில் திகழ்ந்தது. 1789 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயர் ஆட்சி காலம் முடியும் வரை 5 தாலுகாவிற்கு ஒரு தலைநகரம் என கும்பகோணம் தலைநகரமாக விளங்கியது.  அதே போல் கடந்த 1806 ஆம் ஆண்டு முதல் 1863 ஆம் ஆண்டு வரை திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்ட பகுதிகளுக்கு மாவட்ட நீதிமன்றம் கும்பகோணத்தில் செயல்பட்டு வந்தது. இன்றும்  மாவட்ட தலைமை நீதிமன்றம், சிவில் நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றகள், மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்களும் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களாக செயல்பட்டு வருகிறது.


கும்பகோணம் நகரம் கடந்த 1866 ஆம் ஆண்டு முதல் நகராட்சி அந்தஸ்து பெற்று சிறப்பு நகராட்சியாக தமிழகத்தில் குறிப்பிடப்படும் நகராட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது.  12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும்  உலக புகழ்பெற்ற மாசி மகாமகமும், வருடந்தோறும் நடைபெறும் மாசிமகமத்தின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாமககுளத்தில் புனித நீராடி செல்வார்கள். இதே போல் உலகத்தில் முதன்முதலாக தோன்ற ஆதிகும்பேஸ்வரர் கோயில், 74 லட்சம் கோடி மந்திரங்களை உள்ளடக்கிய மங்களாம்பிகையம்மன் உள்ள 12 சிவன் கோயில்களும், 5 பெருமாள் கோயில்கள் என கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் புராதன, நவக்கிரஹ, பரிகார கோயில்கள் உள்ளன.  சோழர் காலத்தில் எச்சங்கள் மிச்சங்களும் உள்ளதால், தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாடு, மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வந்து செல்வார்கள்.





அதே போல் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி நாகை மாவட்டம் வரை சேவையை இன்றும் வழங்குகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள 8 பேருந்து கோட்டங்களில் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டமும் செயல்படுகிறது.  மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் காவிரி டெல்டா மாவட்டத்திற்கான தலைமை அலுவலகம் கும்பகோணத்தில் செயல்படுகிறது. அதே போல் வர்த்தக கேந்திரமாக கும்பகோணம் விளங்குவதால் தஞ்சைக்கு முன்னரே கும்பகோணத்தில் வருமான வரித்துறை அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.


மேலும் மாவட்ட தலைமையகத்திற்கு தேவையான பதிவாளர் அலுவலகம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, வட்டார போக்குவரத்து அலுவலகம், கல்வி மாவட்டமும் தற்போது இயங்கி வருகிறது.  கும்பகோணம் மறைமாவட்டம் என்பது தஞ்சை, பெரம்பலூர், அரியலூர் திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கி, நாமக்கல் வரை இன்றளவும் செயல்பட்டு வருகிறது. அதே போல் தனியார் நிறுவனங்களான சிட்டி யூனியன் வங்கியின் தலைமையிடம், இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகம், கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனம் தலைமையிடம் என ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.


பாரம்பரியமும், வரலாற்று பின்னணியும் கொண்டுள்ள கும்பகோணத்தில் கைவினைப் பொருட்களான ஐம்பொன் சிலைகள், பித்தளை குத்து விளக்குகள், பாத்திரங்கள் என நாள்தோறும் லட்சகணக்கான ரூபாய்க்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதே போல் கும்பகோணம் வெற்றிலை, நெய் சீவல் உள்ளிட்ட சிறப்புகளாகும். கும்பகோணத்தில் நாள்ஒன்றுக்கு 50 கிலோ தங்கம் விற்பனை செய்யப்படுவதால், பிரபலமான நகை நிறுவனங்கள் அனைத்தும் கும்பகோணத்தில் விற்பனையை தொடங்குகின்றனர். இவை மட்டுமல்லாமல் நாள்தோறும் கும்பகோணத்தில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு பரிமாற்றம் நடைபெற்று வருகின்றது.




மாவட்ட தலைநகரமாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடி வந்தால், கடந்த அதிமுக ஆட்சியின் போது, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் தஞ்சையை பிரித்து கும்பகோணம் தனிமாவட்ட அறிவிப்பு விரைவில் வெளியாகுமென்ற உறுதியளித்தார்.  ஆனால் அதன் பின் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் மீண்டும் ஆர்ப்பாட்டம், போராட்டம், கோலம் வரைதல், மனு அனுப்புதல் போன்ற பல்வேறு விதமாக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.


நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது, திமுக தலைவர் முக.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்தால், கும்பகோணம் புதிய மாவட்டம் அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருக்கடையூரிலும், ஒரத்தநாட்டிலும் தெரிவித்தார். ஆனால் பதவி ஏற்று, பல நாட்கள் ஆன நிலையில், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காமல் இருந்து வருகிறார்.  ஆனால், கும்பகோணத்தை தனி மாநகராட்சியாக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.


தஞ்சைக்கு வரும் தமிழக முதல்வர் முக.ஸ்டாலினை, நேரில் சந்தித்து, கும்பகோணத்தை தனி மாவட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கை கேட்க வேண்டும் என அரசு கொறடா, எம்பி, எம்எல்ஏக்கள் மனு அளித்திருந்தனர்.ஆனால் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் யாரையும் சந்திக்க வில்லை என்றும், அவருக்கு நேரமில்லை என்ற திமுகவினர் பதில் கூறியதால், கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்பு குழு சார்பில்  தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் பிரம்மாண்டமான வகையில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், கும்பகோணத்தை மாநகராட்சியாக மாற்றிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு நன்றி, தங்களது திருக்கரங்களால் கும்பகோணம் புதிய மாவட்டத்தையும் அமைத்து துவக்கி வைத்திட வேண்டுகிறோம் என போஸ்டரில் அச்சிட்டு, தமிழக முதல்வர் தங்கியிலுள்ள ஹோட்டலிருந்து, விழா நடைபெறும் சாலைகளில் ஒட்டியுள்ளதால், திமுகவினர் மற்றும் போலீசார் பதற்றமடைந்தனர். இதனால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இது குறித்து கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் மக.ஸ்டாலின் கூறுகையில், கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை, தமிழக முதல்வரிடம் கூற வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அதற்கு அரசு கொறடா கோவி.செழியன், தமிழக முதல்வருக்கு நேரமில்லை, திருச்சி செல்வதால், யாரையும் சந்திக்க வில்லை என்று பதில் கூறினார்.  வரும் 5ஆம் தேதி முதல்வருக்கு நினைவூட்டும் விதமாக, கும்பகோணம் மாவட்ட மக்களை திரட்டி போராட்டம் செய்யப்படும். தொடர்ந்து, சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் சட்டமன்றத்தின் முன்பு போராட்டம் நடைத்தப்படும்.  இது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டால், தமிழக முதல்வர் முன்பு போல் இல்லை, ஐஏஎஸ் அதிகாரிகளின் வழிகாட்டுதலில் இருக்கின்றார்.




பழைய படி நெருங்கி சந்திக்க முடியவில்லை. சந்தர்ப்பம் வரும் போது, அவரிடம் தெரிவிக்கின்றோம். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மயிலாடுதுறை, ராணிப்பேட்டை உள்ளிட்ட புதிய மாவட்டமாக அறிவித்தும் போதுமான நிதி இல்லாததால், எந்த விதமான பணிகளும் நடைபெறாமல் இருக்கின்றது. புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றால் சுமார் 500  கோடி வேண்டும் என்று பதில் கூறுகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழக முதல்வர், கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக அறிவிக்கா விட்டால், கும்பகோணம் மாவட்ட மக்கள் தங்களது கோரிக்கையை திமுகவிற்கு பிரதிபலிப்பார்கள் என்றார்.