ஆற்றில் சரித்திர பதிவேடு குற்றவாளி சடலமாக மீட்பு – உடலை வைத்து உறவினர்கள் திடீர் சாலை மறியல்!
மூப்பக்கோவில் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவரும், உயிரிழந்த மண்டை செல்வமும் ஒன்றாக காவேரி ஆற்றில் இறங்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

கும்பகோணம்: கும்பகோணம் பாலக்கரை காவேரி ஆற்று பாலத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவர் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமும், அதனைத் தொடர்ந்து குற்றவாளியை கைது செய்யக் கோரி உறவினர்கள் உடலை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை வழக்கு தொடர்பாக ஒருவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
காவேரி ஆற்றில் மிதந்த சடலம்
கும்பகோணத்தில் கஞ்சா மற்றும் மதுவகைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததாக, கும்பகோணம் நகர கிழக்கு காவல் நிலையத்தாரால் 'சரித்திர பதிவேடு குற்றவாளி' (History Sheeter) ஆக அறிவிக்கப்பட்டவர் மண்டை செல்வம் (வயது 53). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், பாலக்கரை காவேரி ஆற்றுப் பகுதியில் மண்டை செல்வம் மர்மமான முறையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவரது தலை, முதுகு, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, உடல் உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிசிடிவி காட்சியால் உடைந்த ரகசியம்: மது போதையில் தகராறு
இக்கொலை சம்பவம் தொடர்பாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பாலக்கரை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, மூப்பக்கோவில் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவரும், உயிரிழந்த மண்டை செல்வமும் ஒன்றாக காவேரி ஆற்றில் இறங்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் தமிழரசனைப் பிடித்து போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மண்டை செல்வமும் தமிழரசனும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதும், அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் முற்றி, ஒருவரையொருவர் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டதில் மண்டை செல்வம் உயிரிழந்ததும் அம்பலமானது.
உடலை வீதியில் வைத்து உறவினர்கள் சாலை மறியல்
இதற்கிடையில், மண்டை செல்வத்தைக் கொலை செய்த நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, உடற்கூறு ஆய்வு முடிந்து வந்த உடலுடன் உறவினர்கள் திடீர் என்று சாலை மறயில் போராட்டத்தில் குதித்தனர். பாலக்கரை பகுதியின் சாலையின் குறுக்கே மண்டை செல்வத்தின் உடலை வைத்து உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இக்கொலை சம்பவம் தொடர்பாக மூப்பக்கோவில் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்துவிட்டதாக தெரிவித்தனர்.
காவல்துறையினரின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உறவினர்கள், சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். அதன்பின்னர் மண்டை செல்வத்தின் உடல் இறுதிச் சடங்கிற்காக மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த திடீர் சாலை மறியல் கும்பகோணம் பாலக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போக்குவரத்து பாதிப்பையும் ஏற்படுத்தியதால் மக்கள் அவதியடைந்தனர்.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்






















