மிகப்பெரிய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்... பாஜக மாநில பொதுச்செயலாளர் பெருமிதம்
பட்ஜெட்டைப் பற்றி ஆய்வு செய்வதற்கு முன்பாகவே அதைப்பற்றி மக்கள் மத்தியிலே எதிர்மறையான கருத்துக்களை எடுத்துச் செல்வதற்கு தொடர்ந்து இந்த திமுக கூட்டணி முயற்சி செய்து கொண்டிருக்கின்றது.

தஞ்சாவூர்: இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 9வது முறையாக மிகப்பெரிய பட்ஜெட்டாக இருக்கக்கூடிய ரூ.53 லட்சம் கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என்று பாஜக மாநில பொதுச்செயலர் கருப்பு முருகானந்தம் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இதுவரை இந்தியாவிலே இல்லாத அளவுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால்கூட, இங்கே இருக்கக்கூடிய திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் பட்ஜெட்டிலே ஒதுக்கப்பட்ட நிதி 'முட்டை' என்று போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கின்றனர்.இது ஒரு மிகப்பெரிய வேதனையான விஷயம். இந்த நாட்டின் வளர்ச்சிக்காக மோடியின் வழிகாட்டுதலோடு நிதி அமைச்சர் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தாலும் கூட, அந்த பட்ஜெட்டைப் பற்றி ஆய்வு செய்வதற்கு முன்பாகவே அதைப்பற்றி மக்கள் மத்தியிலே எதிர்மறையான கருத்துக்களை எடுத்துச் செல்வதற்கு தொடர்ந்து இந்த திமுக கூட்டணி முயற்சி செய்து கொண்டிருக்கின்றது.
பொருளாதாரத்தில் வளர்ச்சி, பாதுகாப்புத் துறையில் வளர்ச்சி, உள் கட்டமைப்பில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கம், விவசாயத் துறைகளில் முன்னேற்றம் என எல்லா துறையிலும் ஒரு சாதாரண ஏழை எளிய மக்களுடைய வாழ்க்கை தரத்தில் வளர்ச்சியை கொடுக்கணும் அப்படிங்கிற நோக்கத்தில்தான் இந்த அரசாங்கம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து நிறைய ஜிஎஸ்டி கொடுக்கிறோம், வருமானம் அதிகமா போகுது எங்க மாநிலத்திலே இருந்து (தமிழ்நாட்டிலிருந்து), அதனால மத்திய அரசாங்கம் அந்த வருமானம் எந்த அளவுக்கு வருதோ அந்த பகிர்வின் அடிப்படையில் நிதிப் பகிர்வைக் கொடுக்கணும்' அப்படின்னு சொல்லி கோரிக்கை வச்சிட்டு இருந்தாங்க திராவிட முன்னேற்றக் கழகம். இந்த முறை மத்திய அரசாங்கம் அவர்கள் சொன்னதின் அடிப்படையிலேயே கூட, அவர்கள் கேட்டுக்கொண்டதையே மையமாக வைத்துக்கூட, ஒரு வருமானத்தின் அடிப்படையில் நிதிப் பகிர்வைக் கொண்டு வந்து, இன்றைக்கு வட மாநிலங்களை விட தமிழ்நாட்டிற்கு அதிகமான நிதிப் பகிர்வு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
குஜராத்துக்கு நிதி ஒதுக்கிட்டாங்க, யூபிக்கு நிதி ஒதுக்கிட்டாங்க, எங்க மாநிலத்துக்கு குறைச்சிட்டாங்க, தமிழ்நாட்டைப் புறக்கணிச்சிட்டாங்க என்று சொல்லும் திமுகவினர், இந்த ஆண்டு வட மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட தமிழ்நாட்டிற்கு அதிகமான நிதிப் பகிர்வை நம்ம கொடுத்திருக்கோமே அதை வரவேற்க மறுக்கின்றனர்.
இன்றைக்கு இருக்கக்கூடிய உலகச் சூழல் உங்க எல்லாருக்கும் தெரியும். ஒரு நாட்டின் அதிபரை இன்னொரு நாட்டின் ராணுவம் போய் யாருக்குமே தெரியாம கைது பண்ணிக்கொண்டு வரக்கூடிய அளவுக்கு இன்றைக்கு உலகத்துல சர்வாதிகாரம் தலைதூக்கி இருக்கு. இந்த காலகட்டத்துல நம்ம நாட்டினுடைய ராணுவத்தைப் பலப்படுத்த வேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை என்பதால் மத்திய அரசு பாதுகாப்புக்கென்று 42 சதவீத நிதியை ஒதுக்கி இருக்கிறோம்.
உலக நாடுகளிலேயே தலைசிறந்த ராணுவமா நம்முடைய இந்திய நாட்டினுடைய ராணுவத்தை மாத்தணும் என்பதற்காக நிதி அமைச்சர் பட்ஜெட்ல 7 லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறார். இந்த ஆண்டு நம்முடைய ரயில்வே திட்டத்துல பட்ஜெட்டில் அறிவிச்சதுக்கு பிறகு கூட திமுக 'தமிழ்நாட்டுக்கு ஒன்னும் பண்ணல' என்று கூறுகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சியில் 2009லிருந்து 2014 வரைக்கும் ஐந்து ஆண்டுகாலத்துல தமிழ்நாட்டினுடைய ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.879 கோடிதான். ஆனா இந்த பட்ஜெட்ல மட்டும் நம்ம அரசாங்கம் 7 ஆயிரத்து 611 கோடியை தமிழ்நாட்டினுடைய ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கியிருக்கிறது. ஆனா முட்டை போட்டு போஸ்டர் ஒட்டுகின்றனர்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு இல்லாத அளவிற்கு சென்னையிலிருந்து பெங்களூரு, சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு அதிவேக ரயில் போறதுக்கான திட்டத்தை அறிவிச்சு, இப்ப நம்ம சென்னையிலிருந்து பெங்களூரு போறோம்னா ஒரு மணி நேரத்துல போயிடலாம், ஹைதராபாத் போறோம்னா அதிகபட்சம் 3 மணி நேரத்துல போயிடலாம் அப்படின்னு சொல்லக்கூடிய அளவுக்குத் தமிழ்நாட்டுக்கு ரயில்வே திட்டங்கள்ல மிகப்பெரிய முக்கியத்துவத்தைக் மத்திய அரசு கொடுத்துள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு உதவக்கூடிய திட்டத்தை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களுக்கு என்ன கொடுக்கிறாங்களோ, அதே சதவீதத்துல தமிழ்நாட்டில இருக்கக்கூடிய மகளிர் சுய உதவி குழுக்கள்ல இருக்கக்கூடிய பெண்கள் வளர்ச்சி அடையறதுக்கான நிதியை மத்திய அரசாங்கம் ஒதுக்குது. ஆனா தமிழ்நாட்டுக்கு ஒன்னும் கொடுக்கவில்லை என்று பொய்பிரசாரம் செய்கின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிக அளவுல பெருக்குறதுக்காக பல்வேறு திட்டங்களை பட்ஜெட்ல மத்திய அரசு அறிவித்துள்ளது. மற்ற மாநிலங்களுக்கு என்ன தொகை ஒதுக்கப்படுதோ, எந்த மாதிரி முன்னுரிமை கொடுக்கப்படுதோ, அந்த மாதிரி நம்ம மாநிலத்துக்கும் நிதி வரப்படுகிறது.
மிகப்பெரிய அளவில் தென்னை விவசாயம் இருக்கக்கூடிய ஒரு மாவட்டம் தஞ்சை மாவட்டம். தென்னை விவசாயத்தைப் பத்தி இதுவரைக்கும் எந்த ஆட்சியிலயாவது மத்திய பட்ஜெட்ல தென்னை விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றி இருக்காங்களா? இந்த பட்ஜெட்டில் தென்னை விவசாயிகளுக்கு பல்வேறு அறிவிப்புகளை கொடுத்திருக்கின்றனர்.
ஒரு ஏக்கர் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ. 10 ஆயிரம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தை இந்த பட்ஜெட்ல அறிவிச்சிருக்காங்க.
அதே மாதிரி தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கக்கூடியதை இந்த பட்ஜெட்ல அறிவிச்சிருக்காங்க, அதுக்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கு. அதே மாதிரி தென்னை இளநீர், தேங்காய் இது போன்ற பொருட்கள் மூலமா மதிப்புக் கூட்டப்பட்ட, அதாவது பதப்படுத்தப்பட்ட இளநீரை பாட்டிலில் அடைத்து விற்பதாவாக இருந்தாலும் சரி, இந்த மாதிரி மதிப்புக் கூட்டப்பட்டு தொழில் செய்யக்கூடியவங்களுக்கு ரூ.50 லட்சம் ரூபாய் வரை மானியம் கொடுப்பதாக அறிவித்துள்ளனர்.
தென்னையில வரக்கூடிய அது நோயா இருந்தாலும் சரி, அல்லது குருத்துப்பூச்சி இந்த மாதிரி பூச்சியால அடிபடக்கூடிய தென்னை மரங்களுடைய பாதுகாப்புக்காக மத்திய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இப்படி எத்தனை அறிவிப்புகளை கொடுத்தாலும் கூட, எவ்வளவு தமிழ்நாட்டுக்கு நிதியை ஒதுக்கினாலும் கூட, வட மாநிலங்களை விட அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டாலும் கூட, ஒரு நன்றி தெரிவிக்கக்கூடிய பழக்கம் இல்லாத ஒரு நன்றி கெட்ட அரசாங்கமாக திமுக உள்ளது.
பாராட்ட வேண்டிய இடத்துல பாராட்டணும், அதை கண்டிக்க வேண்டிய இடத்துல கண்டிக்கணும். அதுதான் ஒரு எதிர்க்கட்சியோட கடமை. பாராட்டவே மாட்டோம், எதை பண்ணினாலும் நாங்கள் கண்டனம் தெரிவித்துக் கொண்டே இருப்போம், அதை மூடி மறைப்பதற்கே நாங்கள் முயற்சி செய்வோம் என்று ஒரு நன்றிகெட்ட ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை இந்தியா முழுவதும் உணர்த்தக்கூடிய ஒரு ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது.
இதை கண்டிக்கிறோம். இந்த பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கும் நம்முடைய தென்பகுதிக்கும் தஞ்சை பகுதிக்கும் மிகப்பெரிய திட்டங்களைக் கொடுத்திருக்கக்கூடிய பட்ஜெட். அதனால தஞ்சை மாவட்ட மக்கள் சார்பாக நாங்க வரவேற்கிறோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்கு எதிராக மக்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்றால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அங்கங்கே போராட்டம் நடத்திக்கிட்டு இருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.என்ன வாக்குறுதி கொடுத்தாங்களோ, அந்த வாக்குறுதியில சொன்ன விஷயங்களை நிறைவேத்தாத காரணத்தினால இன்னைக்கு அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துறாங்க, மக்கள் போராட்டம் நடத்துறாங்க. கொடுத்த வாக்குறுதியில 70 சதவீதம் நிறைவேத்தாத ஒரு அரசாங்கம் திமுக அரசாங்கம். அதனால கண்டிப்பா 2026 தேர்தல்ல மக்கள் திமுகவுக்கு தகுந்த பாடத்தைப் புகட்டுவாங்க. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது, மாவட்டத் தலைவர்கள் பி. ஜெய்சதீஷ் (தெற்கு), தங்க. கென்னடி (வடக்கு), ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு மாநிலச் செயலர் மருத்துவர் பி. பாரதிமோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.























