வீட்டு காம்பவுண்ட் சுவரில் மோதி பைக் விபத்து... சம்பவ இடத்திலேயே 2 சிறுவர்கள் பலி
வீட்டு காம்பவுண்ட் சுவரில் மோதியதில் அதில் வந்த இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூண்டிமாதா கோயிலில் வேகமாக வந்த பைக் வீட்டு காம்பவுண்ட் சுவரில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதாகோயிலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மிக வேகமாக வந்த பைக் நிலைதடுமாறி வீட்டு காம்பவுண்ட் சுவரில் மோதியதில் அதில் வந்த இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் இறந்து கிடந்தது யாருக்கும் தெரியாத நிலையில் மறுநாள் (நேற்று) காலை தெரிய வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் அருகே கடகடப்பை வடக்கு தெருவை சேர்ந்தவர் அமிதாபச்சன் மகன் சந்தோஷ் (17). இவரது நண்பர் பாபநாசத்தை அடுத்த வேப்பங்குளம் கோயில்தெருவை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் திரிசேக் (17). சந்தோஷ் கோவையில் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். திரிசேக் திருச்சியில் தனியார் கல்லூரியில் பட்டபடிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் இருவரும் லால்குடியில் இருந்து பூண்டி மாதா கோயில் வழியாக நேற்று முன்தினம் இரவு பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தனர். பூண்டி மாதா கோயில் - திருக்காட்டுப்பள்ளி பிரதான சாலை இடையே வந்த போது, சாலையின் வளைவில் வேகமாக பைக்கில் திரும்பியபோது நிலை தடுமாறி லூர்துராஜ் என்பவரின் வீட்டு காம்பவுண்ட் சுவரில் பைக் மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.
மறுநாள் நேற்று காலை அவ்வழியாக வயலுக்குச் சென்றவர்கள் பார்த்துவிட்டு திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருக்காட்டுப்பள்ளி காவல் ஆய்வாளர் அகிலன் மற்றும் போலீஸார் விரைந்து சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல்நாள் நள்ளிரவில் நடந்த விபத்து பற்றி யாருக்கும் தெரியாத நிலையில் இரண்டு சிறுவர்களும் பரிதாபமாக இறந்த சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
80 அடி ஆழ கிணற்றில் விழுந்த மாணவி உயிருடன் மீட்பு
மணப்பாறை அருகே 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த 12 ம் வகுப்பு மாணவி உயிர் பிழைக்க நீந்திக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து சென்று மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆர்எஸ் வையம்பட்டியை சேர்ந்த மாணவி நாகலெட்சுமி (17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடித்து விட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே தண்ணீர் தொட்டியில் கை – கால்களை கழுவ சென்ற போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார். சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் 20 அடி தண்ணீர் இருந்த நிலையில் மாணவி நீந்தியபடி ஒரு இடத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் மாணவி தவறி விழுந்ததை பார்த்த அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் உடனே கிணற்றில் குதித்து மாணவி பயந்து விடாமல் இருங்க அவருக்கு பாதுகாப்பாக இருந்தனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வையம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு கட்டி பள்ளி மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதே போல் கிணற்றில் இறங்கிய மற்ற இரண்டு வாலிபர்களும் கயிறு மூலம் கிணற்றில் இருந்து மேலேறி வந்தனர். மாணவியை பாதுகாப்பாக பார்த்துக் கொண்ட வாலிபர்கள் மற்றும் பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.























