இளைஞர்கள் கவனத்திற்கு... ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சி: தஞ்சை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
தனியார் நிறுவனம் மற்றும் தாட்கோ இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

தஞ்சாவூர்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை (Cosmetology, Aesthetic training and Dermaplaining training) ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தனியார் நிறுவனம் மற்றும் தாட்கோ இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை (Cosmetology, Aesthetic training and Dermaplaining training) ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு 8ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரைவும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 90 நாட்கள் ஆகும். மேலும் இப்பயிற்சி இராணிப்பேட்டை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைப்பெறவுள்ளது இங்கு தங்கு வசதிகள், உணவுகள் உள்பட செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.
இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.18,000 முதல் ரூ.25,000 வரைவுடன் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தகுதியான நபர்கள் தாட்கோ இணையதளம் (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் கவனத்திற்கு...
தஞ்சாவூர் மாவட்டத்தில் C மற்றும் D பிரிவு வாய்க்கால் தூர்வாரும் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் விவசாயிகள் தவறாது கலந்து கொள்ளுங்கள் என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அழைப்பு விடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக எதிர்வரும் 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான C மற்றும் D பிரிவு வாய்க்கால்களை தூர்வார கருத்துரு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர், மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 23.02.2026ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் C மற்றும் D பிரிவு வாய்க்கால் தூர்வாரும் பணிக்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது கிராமங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள C மற்றும் D பிரிவு வாய்க்கால்களின் விவரங்களை இக்கருத்துக் கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.























