தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கோட்டத்தில் இரு வார கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 

Continues below advertisement

கோழி கழிச்சல் நோய் என்பது கோழிகளில் அதிகமாக காணப்படும் ஒரு தொற்றுநோய் ஆகும். இந்த நோய் கோழிகளின் சுவாச அமைப்பு, நரம்பு அமைப்பு மற்றும் ஜீரண அமைப்பை பாதிக்கும். இதனால் கோழிகள் தண்ணீராக கழிச்சல், சோர்வு, சுவாச சிரமம், முட்டை உற்பத்தி குறைவு போன்ற பாதிப்புகளை சந்திக்கின்றன. சில நேரங்களில் அதிக அளவில் உயிரிழப்பும் ஏற்படும்.

இந்த நோய் ஒரு வைரஸ் காரணமாக ஏற்படுகிறது. இந்த நோய் பரவுவதற்கான முக்கிய காரணங்கள் நோயுற்ற கோழிகளுடன் நேரடி தொடர்பு. நோயுள்ள கோழிகளின் மலம், மூச்சுக் காற்று, அசுத்தமான குடிநீர், தீவனம், நோயுள்ள பண்ணைகளிலிருந்து கொண்டு வரப்படும் புது கோழிகள் ஆகியவற்றால் ஏற்படுகிறது. இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள் தண்ணீராக பச்சை அல்லது வெள்ளை நிற கழிச்சல்,  மூக்கில் நீர் வடிதல், தும்மல், மூச்சுத் திணறல், கழுத்து வளைதல், நடுக்கம், திடீர் மயக்கம், முட்டை உற்பத்தி திடீரென குறைதல், கோழிகள் திடீரென இறப்பு போன்றவை ஏற்படுகிறது. இதனால் கோழி வளர்ப்பவர்கள் பெரிய அளவில் பொருளாதார நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

Continues below advertisement

இதுபோன்ற கோழி கழிச்சல் நோயை தடுக்க பட்டுக்கோட்டை கோட்டத்தில் 2 வாரம் தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதுகுறித்து கால்நடைத்துறை உதவி இயக்குநர் மரு இ.விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

ராணிகட் நோய் எனப்படும் வெள்ளை கழிச்சல் நோய் கோழிகளைத் தாக்கும் மிக மோசமான நோய். இது குளிர்காலத்தில் அதிகம் பரவக்கூடியது. பிறந்த, 8 வாரமான கோழிக்குஞ்சுகளுக்கு இதற்கான தடுப்பூசியை கட்டாயம் செலுத்த வேண்டும். 

தவறினால் நோய் பாதிக்கப்பட்ட இரண்டு நாள்களில் குஞ்சுகள் இறக்க நேரிடும். பெரிய கோழிகள் என்றால், வாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதுடன், முட்டை இடுவதிலும் பிரச்னை ஏற்படும். 

இதர கோழிகளுக்கும் பரவும் என்பதால், கோழி வளா்ப்பவா்களுக்கு தேவையற்ற பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தும். பிராய்லா் கோழிகளைப் பொறுத்தவரை, பண்ணையாளா்களே அவற்றுக்கு தடுப்பூசி செலுத்தி பராமரித்துக் கொள்கின்றனா்.  எனவே, நாட்டுக்கோழிகள் மற்றும் வீடுகளில் வளா்க்கப்படும் கோழிகளுக்கு தடுப்பூசி மிக அவசியம். வெள்ளை கழிச்சல் நோயால் கோழிகளுக்கு 90 சதவீதம் இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 

இதிலிருந்து கோழிகளை பாதுகாக்க சனிக்கிழமைதோறும் கால்நடை மருந்தகங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் வெள்ளை கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

பட்டுக்கோட்டை கோட்டத்தில் உள்ள 27 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 2 கால்நடை கிளை நிலையம் மூலம் நடத்தப்படும் முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி போட்டு பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு உதவி இயக்குனர் மரு. இ. விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

முட்டை உற்பத்தி திடீரென குறையும். முட்டையின் ஓடு மெல்லியதாக அல்லது வடிவம் மாறி வரும். முட்டை இடுவதே நிறுத்தப்படும் நிலையும் ஏற்படும். கோழி குஞ்சுகளில் நோய் தீவிரம் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும். அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படும். வளர்ச்சி தடைபடுதல் ஆகியவை ஏற்படும்.