கும்பகோணத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்ப உற்சவம்: ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் பரவசம்!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரதான கோயிலாக ஆதிகும்பேஸ்வரர் கோயில் விளங்குகிறது. கும்பகோணத்திற்கு திருக்குடமாக்கு, குடந்தை என்ற பெயர்கள் உள்ளதாக தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கோயில்கள் நிறைந்த நகராக விளங்கி வரும் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோயில்களின் நகரமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரதான கோயிலாக ஆதிகும்பேஸ்வரர் கோயில் விளங்குகிறது. கும்பகோணத்திற்கு திருக்குடமாக்கு, குடந்தை என்ற பெயர்கள் உள்ளதாக தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. 1600 ஆண்டுகள் பழமையான ஆதி கும்பேஸ்வரர் கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் 128 அடி உயரம் கொண்டது. கோயிலின் மூலவரான ஆதி கும்பேஸ்வரர் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கம் என்று ஸ்தல வரலாறு கூறுகின்றது.
இந்த சுயம்பு லிங்கத்திற்கு ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே தைலாபிஷேகம் நடக்கிறது. காசி, ராமேஸ்வரம், சிதம்பரம் வரிசையில் இந்த கோயில் 11-வது சிவதலமாக விளங்குகின்றது. கோவிலில் வீற்றிருக்கும் மங்களாம்பிகை மந்திரங்களுக்கு எல்லாம் அதிபதியாக விளங்குவதால் அம்மனுக்கு மந்திரபீடேஸ்வரி என்ற பெயரும் உண்டு. இந்த கோவிலில் வெளிப்பிரகார கிழக்கு மூலையில் அகத்தியருக்கு என்று தனி சன்னதி அமைய பெற்றுள்ளது.
சைவ சமயத்தை வளர்த்த அறுபத்து நான்கு நாயன்மார்களுக்கும் கோவிலில் சிலைகள் உள்ளன. இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் மாசி மக விழா, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகவிழா, மகாமக குளத்தில் நடக்கும் பங்குனி உத்திர தெப்ப உற்சவம் ஆகியவை பிரசித்தி பெற்ற விழாக்கள் ஆகும்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆதிகும்பேஸ்வரர் கோயில் கடந்த 2009-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதன்பின்னர் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த 2023 ஆண்டு பாலாலயம் நடந்தது. குடமுழுக்கு பணிகள் நடந்ததால் கோயிலில் இருந்து சுவாமி புறப்பாடு இல்லாமல் அனைத்து நிகழ்வுகளும் நடந்தது. கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டிருந்ததால் மாசிமக விழா, பங்குனி உத்திரவிழா தெப்ப உற்சவம் உள்ளிட்ட விழாக்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடக்காமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி இக்கோயில் குடமுழுக்கு விழா மிகவும் சிறப்பாக நடந்தது. அதன்பின்னர் அனைத்து முக்கிய விழாக்களும் சிறப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு காலை 9 மணிக்கு கோயிலில் இருந்து அம்பாள் புறப்பாடு நடந்தது. புறப்பாட்டின் போது கோயில் யானை மங்களம் முன் செல்ல சுவாமி மகாமக குளத்தில் கீழ் கரை பகுதியில் தயாரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடா்ந்து காலை 10.20 மணிக்கு அலைமகளும், கலைமகளும் கவரி வீச மலைமகளாகிய மங்களாம்பிகை தெப்பத்தில் ஒரு சுற்று உலா வந்தார். தொடர்ந்து மாலை மகாமக குளத்தில் 2 சுற்றுகள் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 3 ஆண்டுகளுக்கு பின்னர் தெப்பத்தில் சுவாமி உலா வந்ததை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் அறங்காவலர்கள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















