உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வேண்டுமா? தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள இந்தக் கோயில்களைத் தரிசியுங்கள்!
தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள். இப்பகுதிகளில் திரும்பும் திசையெல்லாம் தொன்மை வாய்ந்த திருத்தலங்கள் நிறைந்துள்ளன.

தஞ்சாவூர்: காவிரி பாயும் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் திரும்பும் திசையெல்லாம் விண்ணை முட்டும் கோபுரங்களைக் கொண்ட பழமையான கோயில்கள் நிறைந்துள்ளன. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு தனிச்சிறப்பைக் கொண்டுள்ள நிலையில், பக்தர்களின் குறைகளைத் தீர்த்து, வேண்டுதல்களை உடனடியாக நிறைவேற்றும் சிறப்புமிக்கத் திருத்தலங்கள் எவை? எந்தப் பிரச்சனைக்கு எந்தக் கோயிலைத் தரிசிக்கலாம்? விரிவாகப் பார்ப்போம்.
'சோழ வளநாடு சோறுடைத்து' என்பதற்கு ஏற்ப செழிப்பான விவசாயத்திற்கு மட்டுமின்றி, விண்ணை முட்டும் கோபுரங்களைக் கொண்ட பிரம்மாண்டமான கோயில்களுக்கும் புகழ் பெற்றவை தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள். இப்பகுதிகளில் திரும்பும் திசையெல்லாம் தொன்மை வாய்ந்த திருத்தலங்கள் நிறைந்துள்ளன.
இங்குள்ள ஒவ்வொரு கோயிலும் தனித்துவமான வரலாற்றையும், பக்தர்களின் குறிப்பிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றும் சிறப்புச் சக்தியையும் கொண்டுள்ளன. அந்த வகையில், நமது வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் தீரவும், நல்வாழ்வு பெறவும் எந்தெந்தக் கோயில்களுக்குச் சென்று வழிபட வேண்டும் என்பது குறித்த ஒரு விரிவான ஆன்மீக வழிகாட்டி இதோ:
குழந்தை பாக்கியம் மற்றும் சுகப்பிரசவம்
கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி கோயில்: திருமணமாகி நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிப்பவர்கள், கும்பகோணம் அருகே உள்ள கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி அம்மனைத் தரிசித்தால் விரைவில் கருத்தரிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில்: கருத்தரித்த பெண்கள், தங்கள் வயிற்றில் உள்ள சிசு ஆரோக்கியமாக வளரவும், எவ்விதச் சிக்கலுமின்றிச் சுகப்பிரசவம் நடைபெறவும் பாபநாசம் அருகே உள்ள திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மனை வேண்டி வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.
நோயற்ற வாழ்வு மற்றும் உடல் நலம்
வைத்தீஸ்வரன் கோயில்: 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பார்கள். எத்தகைய தீராத நோயாக இருந்தாலும், சீர்காழி அருகே அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமியை வழிபட்டால் பிணிகள் நீங்கி முழுமையான ஆரோக்கியம் கிடைக்கும்.
கல்வி, கலை மற்றும் ஞானம்சுவாமிமலை முருகன் கோயில்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிறந்த அறிவாற்றலையும், ஞானத்தையும் பெறக் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமியைத் தரிசிக்க வேண்டும்.
கூத்தனூர் சரஸ்வதி கோயில்: பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ - மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும், கலைகளில் அபார வளர்ச்சி பெறவும் திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள கூத்தனூர் மகா சரஸ்வதி அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது அவசியமாகும்.
காரிய வெற்றி மற்றும் பதவி உயர்வு
பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயில்: புதிதாகத் தொடங்கும் எந்தவொரு காரியமாக இருந்தாலும், அதில் முழு வெற்றியை அடையவும், மன தைரியத்தைப் பெறவும் கும்பகோணம் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.
கும்பகோணம் பிரம்மன் கோயில்: பணியிடங்களில் தாங்கள் எதிர்பார்க்கும் உயர் பதவிகள் மற்றும் பதவி உயர்வு (Promotion) கிடைக்கப் பெற, கும்பகோணம் பிரம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் நல்ல வழிகாட்டுதலும், முன்னேற்றமும் கிடைக்கும்.
கடன் நிவர்த்தி மற்றும் செல்வச் செழிப்பு
ஒப்பிலியப்பன் கோயில்: வறுமை நீங்கி, நிலையான செல்வமும் செழிப்பும் வீட்டில் நிலைத்திருக்கக் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும்.
திருச்சேறை சரபரமேஸ்வரர் கோயில்: தீர்க்க முடியாத கடன் சுமைகளில் தவிப்பவர்கள் திருச்சேறை திருத்தலத்திற்குச் சென்று சரபரமேஸ்வரரை வழிபட்டால், ருண விமோசனம் (கடன் நிவர்த்தி) கிடைக்கும்.
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில்: தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இழந்த செல்வம் மற்றும் சொத்துக்களை மீண்டும் பெறத் திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருத்தலத்திற்குச் செல்வது சிறந்தது.
திருமணத் தடை நீக்கம் மற்றும் குடும்ப ஒற்றுமை
கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில்: பெண்கள் சரியான வயதில் ருது ஆவதற்கும் (பூப்படைதல்), அது தொடர்பான உடல் ரீதியான பிரச்சனைகள் முழுமையாகத் தீரவும் கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை) கோயிலில் வழிபட வேண்டும்.
திருமணஞ்சேரி மற்றும் ஆதி கும்பேஸ்வரர் கோயில்: நீண்ட நாட்களாகத் தள்ளிப்போகும் திருமணத் தடைகள் நீங்கத் திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயிலிலும், பெண்கள் தங்களுக்கு ஏற்ற நல்ல கணவனைப் பெறக் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் (மங்களாம்பிகை) கோயிலிலும் வழிபாடு செய்ய வேண்டும்.
திருவலஞ்சுழி கோயில்: குடும்பப் பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பிரிந்து போன கணவன் - மனைவி இருவரும் மீண்டும் இணைந்து வாழ, கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி திருத்தலத்திற்குச் சென்று வழிபடுவது மனக்கசப்புகளை நீக்கி ஒற்றுமையை ஏற்படுத்தும்.
கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்றாலும், ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட இந்தத் தொன்மை வாய்ந்த கோயில்கள் அனைத்தும், நேர்மறை அதிர்வலைகளை (Positive Vibrations) தன்னுள் தாங்கி நிற்கின்றன. இந்தத் திருத்தலங்கள் பக்தர்களை நல்வழிப்படுத்துவது மட்டுமின்றி, அவர்களின் கண்ணீரைத் துடைத்து வேண்டுதல்களை நிறைவேற்றும் புண்ணிய பூமியாக இன்றும் விளங்கி வருகின்றன.
Before You Go
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
ட்ரெண்டிங் செய்திகள்






















