தஞ்சாவூர்: பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் 190 காலிப்பணியிடங்களை நிரப்ப இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது. என்னென்ன காலிப்பணியிடம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க.
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் கிரெடிட் மேனேஜர் மற்றும் வேளாண் மேனேஜர் ஆகிய பதவிகளுக்கு காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் வழக்கமான அடிப்படையில் சிறப்பு அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 190 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. கிரெடிட் மேனேஜர் பதவியில் 130 காலிப்பணியிடங்கள், வேளாண்மை மேனேஜர் பதவியில் 60 பணியிடங்கள் என நிரப்பப்படுகிறது.
கிரெடிட் மேனேஜர் 130
வேளாண்மை மேனேஜர் 60 என மொத்தம் 190 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் எஸ்சி - 28, எஸ்டி - 13, ஒபிசி - 51, பொருளாதாரத்தில் பின்தங்கியவர் - 19, பொதுப்பிரிவு - 79 என நிரப்பப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 காலிப்பணியிடங்கள் உள்ளன.
01.09.2025 தேதியின்படி, விண்ணப்பதார்களின் குறைந்தபட்ச வயது 23 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகப்படியாக விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதார் 02.09.1990 தேதிக்கு முன்னர் பிறந்திருக்கக்கூடாது. அதே போன்று, 01.09.2000 தேதிக்கு பின்னர் பிறந்திருக்கக்கூடாது. வயது வரம்பு 5 வருடங்கள் எஸ்சி, எஸ்டி மற்றும் 3 வருடங்கள் ஒபிசி பிரிவினருக்கு தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படுகிறது.
அதே போன்று, கல்வித்தகுதியை பொறுத்தவரை, கிரெடிட் மேனேஜர் அப்பதவிக்கு பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது CA/CMA/CFA/MBA ஆகியவற்றை படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.
வேளாண் மேனேஜர் பதவிக்கு வேளாண் சார்ந்த படிப்புகளாக விவசாயம், தோட்டக்கலை, டெய்ரி, கால்நடை அறிவியல், வேளாண் பொறியியல் ஆகியவற்றில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் எதிர்பார்க்கப்படுகிறது. பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் தேவை. எஸ்டி, எஸ்சி, ஒபிசி, மாற்றுத்திறனாளிகளுக்கு 55 சதவீதம் தளர்வு உள்ளது.
காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை சம்பளம் வழங்கப்படும். சம்பளத்துடன் கொடுப்பனை மற்றும் அகவிலைப்படி உண்டு. இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, தேர்வு செய்தல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு ஆங்கிலம், பொது அறிவு, பணிக்கான திறன் ஆகியவற்றின் அடிப்படையில் 100 கேள்விகளுடன் தேர்வு நடைபெறும். இதில் பொதுப்பிரிவினர் 40 சதவீதமும், இதர பிரிவினர் 35 சதவீதமும் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். அதனைத்தொடர்ந்து, தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இறுதியாக எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் வெளியிடப்படும். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் தேர்வு மையம் அமைக்கப்படும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் வங்கியின் https://punjabandsind.bank.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.850 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்டணம் ஆன்லைன் வழியாக பெறப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு கடந்த 19-ம் தேதி முதலே விண்ணப்பம் தொடங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக வரும் அக்டோபர் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.