முருக பெருமானின் இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களுள் தைப்பூசம் மிக முக்கியமான விழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச விழாவிற்காக, முருக பக்தர்கள் மாலையணிந்து விரதத்துடன்  பாதயாத்திரையாக  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்து தங்களது நேர்த்தி கடன்களை  செலுத்துவது வழக்கம். 


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பக்தர்கள் இன்றி நடைபெற்ற வடலூர் 151 ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா



கொரோனா தொற்று காரணமாக அரசு  விதித்த கட்டுப்பாடுகளின் படி கடந்த 14 ஆம் தேதி முதல் தைப்பூச நாளான இன்று வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் தைப்பூச  திருவிழா மிக எளிமையான முறையில்  கோயில் உள் பிராகத்தில் வைத்து  நடைபெற்று வருகிறது .




இந்நிலையில்   தைப்பூசத்தன்று நேர்த்தி கடன்களை செலுத்த வேண்டிய பாதையாத்திரை பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு செல்லும் வழியில் அமைத்துள்ள, தூண்டிகை விநாயகர் கோவிலில்   காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் தாங்கள் செலுத்த வேண்டிய   நேர்த்திகடன்களை  செலுத்தி வருகின்றனர். பின்னர் அங்கிருந்து பைரவர் கோயில் கடற்கரையில் புனித நீராடிய பின்னர் தங்களது ஊர்களுக்கு திரும்பி செல்கின்றனர்.




திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்  தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருக்கோயில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து 8.30 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி  நடைபெற்றது. அதனை தொடர்ந்து  உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனை மற்றும் சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.



பின்னர் மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாரதனையை தொடர்ந்து  5.30 மணியளவில் யாகசாலையில் இருந்து சுவாமி அலைவாயுகந்த பெருமான் எழுந்தருளி திருக்கோயில் உள்பிரகாரங்களில் வலம் வந்து அருள்பாலிக்கிறார். கொரானா தடுப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ளதால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆகம விதிகளின் படி கோயில் வளாகத்தின் உள்ளேயே நடக்கிறது.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Tamil news | மீண்டும் மீனவர்கள் போராட்டம்...! அலங்கை ஜல்லிக்கட்டு...! தைப்பூசம்...! - தென்மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்