சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஞானசேகர் என்பவர் இன்று தாக்கல் செய்துள்ள மனுவில்,  “சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் பொதுக்கூட்டம் மற்றும் கூட்டங்களுக்குச் செல்லும் இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டமும் தடுக்கப்படுகிறது.


கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றம் ஆகியவற்றில் மக்கள் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானக் கடை, திரையரங்கம், மால் ஆகியவற்றில் மக்கள் கூடி வருகின்றனர். அதேபோல பரப்புரை கூட்டங்களிலும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் ஒன்று கூடுகின்றனர்.




பொதுமக்கள் மற்றும் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தாமல் பிரச்சாரங்களை மேற்கொள்ள அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டுமென தலைமை நீதிபதி அமர்வில் வழக்கறிஞர் ஞானசேகர் முறையீடு செய்தார். அவரது முறையீட்டை ஏற்ற நீதிமன்றம், இன்று மதியம் விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளது.